தமிழ்நாட்டில் மேலும் 6 மருத்துவக் கல்லூரிகளை தொடங்க மத்திய அரசிடம் அனுமதி கோர உள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை ஸ்டேன்லி மருத்துவமனையில் கை அறுவை சிகிச்சை சிறப்பு மேற்படிப்பு, புணரமைக்கப்பட்ட நூற்றாண்டு கட்டட நிர்வாக அலுவலகம் திறப்பு, மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவித்தல் நிகழ்வில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன், ஸ்டேன்லி மருத்துவமனையில் பழுதடைந்த லிப்ட்கள் அனைத்தையும் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
தடைசெய்யப்பட்ட பான்பராக், குட்கா போன்றவைகளின் விற்பனையை தடுப்பதோடு, வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்த விவகாரத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தின் மூலமும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். தடைசெய்யப்பட்ட பான்பராக், குட்கா விற்பவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் நிகழ்வுகளும் நடைபெறுவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
குட்கா எங்கு விற்கப்படுகிறது என தகவல் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். தமிழ்நாட்டில் புதியதாக 6 மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவது தொடர்பாக ஒன்றிய அமைச்சரை சந்திக்க தாம் நேரம் கேட்டுள்ளதாகவும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.







