சர்வதேச அரசியல் சூழல் மற்றும் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடைகளை கருத்தில் கொண்டு, உள்நாட்டு சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாட்டைப் போக்க மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, “உலகளாவிய எரிபொருள் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அனைத்து எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும் எல்.பி.ஜி (LPG) உற்பத்தியை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு கூடுதலாக உற்பத்தி செய்யப்படும் எரிவாயு, முழுமையாக வீட்டு உபயோகத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமையல் எரிவாயுவை பதுக்குவதையும், கருப்பு சந்தையில் விற்பனை செய்வதையும் தடுக்க, ஒரு சிலிண்டர் முன்பதிவு செய்ததிலிருந்து அடுத்த பதிவிற்கு இடையே 25 நாட்கள் கட்டாய இடைவெளி இருக்க வேண்டும் என்ற புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் எரிவாயுவில், வணிக ரீதியான பயன்பாட்டிற்குப் பதில், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்ற அத்தியாவசியத் துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் பிற தொழிற்சாலைகளின் எரிவாயு தேவைகளைப் பரிசீலிக்க, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் (OMCs) மூன்று செயல் இயக்குநர்கள் (Executive Directors) கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு இத்துறையினரின் கோரிக்கைகளை ஆய்வு செய்து உரிய முடிவுகளை எடுக்கும். பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு விநியோகம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் அமைச்சகம் உறுதி அளித்துள்ளது.







