“பூட்டு, சாவி, சுத்தியல்” அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொன்ன குட்டி ஸ்டோரி!

சேலத்தில் நடைபெற்ற இளைஞர் அணி கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பூட்டு, சாவி மற்றும் சுத்தியல் என்கிற குட்டிக் கதையை கூறியது கட்சியினர் மத்தியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் சேலம் மாவட்ட…

சேலத்தில் நடைபெற்ற இளைஞர் அணி கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பூட்டு, சாவி மற்றும் சுத்தியல் என்கிற குட்டிக் கதையை கூறியது கட்சியினர் மத்தியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.

சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் சேலம் மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததாவது..

“பாஜகவின் 9 ஆண்டுகால ஆட்சியில் பிரதமர் மோடி மாற்றத்தை கொண்டு வருவேன் என்று கூறினார்.  ஆனால் இந்தியா என்ற பெயரை மட்டும்தான் மாற்றி பாரதம் என்று கொண்டு வந்துள்ளார்.

சேலத்தில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டை வெற்றிகரமாக நடத்த வேண்டும்.  அதற்கு அடித்தளமாக அமைந்திருப்பது இளைஞர் அணி தான்,  தலைமை சொல்வதை செய்து காட்டுவது தான் செயல்வீரர்கள்;  எனவே இந்த மாநாட்டை வெற்றி மாநாடாக அமைத்துத் தருவது உங்கள் கையில் தான் உள்ளது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மதுரையில் அதிமுக மாநாடு நடைபெற்றது.  மாநாடு எப்படி நடக்க கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக அது அமைந்தது.  ஆனால் திமுக இளைஞரணி மாநாட்டில் திமுக கொள்கைகள் மற்றும் அதன் வரலாறு கூறப்படும். குறிப்பாக திமுகவின் 3 ஆண்டு கால ஆட்சியில் தேர்தல் அறிக்கையில் சொன்னதையும், சொல்லாததையும் செய்து காட்டியுள்ளது குறித்து விளக்கப்படும்.

2023-க்குள் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவேன் என கூறி பிரதமர் மோடி பொறுப்பேற்றார்.  ஆனால்  தற்பொழுது மீண்டும் தேர்தல் வந்துள்ள நிலையில் 2040-க்குள் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவேன் என்று பேசுகிறார்.

முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இருந்த வரைக்கும் நீட்தேர்வு தமிழ்நாட்டுக்குள் நுழையவில்லை;  ஆனால் அவர்கள் இறந்த பிறகு அதிமுகவினர் விட்டுக் கொடுத்துவிட்டனர்.  எனவே நீட்தேர்வால் பல மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். நீட் தேர்வுக்கு எதிராக இதுவரை 30 லட்சம் கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள கையெழுத்துகளை பெற்று திமுக இளைஞர் அணி மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் கையில் ஒப்படைப்போம்.  இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்றால் பாஜகவை வீழ்த்த வேண்டும்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

இதன் பின்னர் இளைஞர் அணியினர்  மத்தியில் ஒரு குட்டிக் கதையை அமைச்சர் உதயநிதி சொன்னது அனைவர் மத்தியிலும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது..

“பூட்டு ஒன்றை திறப்பதற்காக அதன் தலையின் மீது மிகப்பெரிய சுத்தியலை வைத்து மத்திய அரசு ஓங்கி அடிக்கிறது.  தொடர்ந்து அடித்த போதும் பூட்டை திறக்க முடியவில்லை.  ஆனால் சிறிய சாவி அதை திறந்துவிட்டது.  அப்போது நீ மட்டும் எப்படி பூட்டை திறந்தாய் என சுத்தியல் சாவியிடம் கேட்டது.  அதற்கு சாவி பதிலளித்ததாம் ”நான் பூட்டின் இதயத்தை தொட்டேன்.  ஆனால் நீயோ அதன் தலையின் மீது அடித்தாய். அதனால் தான் பூட்டு திறக்கவில்லை என்று சொன்னதாம்”

இதன் மூலம் கூறுவது என்னவெனில் தமிழ்நாட்டு மக்களின் தலையில் மத்திய அரசு ஓங்கி ஓங்கி அடித்தாலும்,  அது பலனளிக்காது. ஆனால் தமிழ்நாட்டு மக்கள் சாவியை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினிடம் கொடுத்துள்ளார்கள்.  எனவே அவரால் மட்டுமே மக்களின் மனதை தொடமுடியும் என்றார்.

திமுக அமைச்சர்கள் வீட்டில் தொடர்ந்து அமலாக்கத்துறை,  வருமான வரித்துறை சோதனைகள் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சோதனையை கண்டு திமுகவின் கிளைச் செயலாளர் கூட பயப்படமாட்டார்கள்.  தந்தை பெரியார்,  அறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் கொள்கை வாரிசுகள் தான் திமுக இளைஞர் அணியினர்.  எனவே 2021ல் எப்படி தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியை அகற்றினோமோ அதுபோன்று 2024 ஆம் ஆண்டு பாஜக ஆட்சியை அகற்றுவோம்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.