கொரோனா பரவல் குறைந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பங்கேற்றார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியின் மூலம் நமது மாவட்டத்தில் 6214 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அதன் மீது படிபடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
நிறுத்திவைக்கப்பட்டுள்ள உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவது குறித்த கேள்விக்கு, “கொரோனா பெருந்தொற்று காலம் என்பதால் உச்சநீதிமன்றம் ஆறுமாத கால அவகாசம் கொடுத்துள்ளது. இதற்கிடையே மாநில தேர்தல் ஆணையரும் நியமிக்கப்பட்டுள்ளார். ஆயத்த பணிகளும் நடைபெற்றுவருகிறது. சகஜ நிலை திரும்பியவுடன் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும்” என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் 2016 முதல் நான்கு ஆண்டுகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. இதனிடையே 2019 டிசம்பர் மாதம் ஊரகப் பகுதிகளுக்கு மட்டுமே உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதுவரை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.







