உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக சார்பில் இன்று முதல் ஆலோசனை நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 மற்றும் 28-ம் தேதிகளில் தேர்தல் நடந்தது. மாவட்டங்கள் பிரிப்பு காரணமாக நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. அதன் பின் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பரவல் தொடங்கியதால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத ஒன்பது மாவட்டங்களில் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், கொரோனா பெருந்தொற்றைக் காரணம் காட்டி தேர்தலை நடத்தாமல் இருப்பது ஏற்புடையதல்ல என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர்.
இதையடுத்து உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ள தேர்தல் ஆணையம் அதற்கான அலுவலர்களை நியமிக்க உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக இன்று முதல் மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக தலைமை ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் வகையில் 9 மாவட்டங்களின் செயலாளர்களை தனித்தனியாக சந்தித்து அதிமுக தலைமை ஆலோசனை நடத்த உள்ளது.







