திருச்சி சமயபுரம் கோயிலில் இளைஞர் ஒருவர் விற்பனை செய்த தண்ணீர் பாட்டிலில் இறந்த நிலையில் பல்லி ஒன்று கிடந்ததால், பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கீழ வீதி பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் தனது குடும்பத்தினருடன், திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு சென்றுள்ளனர். நேற்று இரவு சென்ற அவர்கள் அங்கேயே தங்கி விட்டு இன்று காலை மொட்டையடித்து நேர்த்திகடன் செலுத்தினர். பின்னர் கோயிலுக்குள் செல்வதற்காக பழனிசாமியும் அவரது குடும்பத்தினரும் பொது தரிசன வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது, அவரது பேத்தி தண்ணீர் தாகமாக உள்ளதால் தண்ணீர் கேட்டுள்ளார். உடனே அருகில் இருந்த தண்ணீர் பாட்டில் விற்பனை செய்பவரிடம் அவர்கள் குடிநீர் வாங்கியுள்ளனர். பின்னர் தண்ணீர் பாட்டிலின் மூடியை திறந்து பார்த்த போது, அதில் இறந்த நிலையில் பல்லி ஒன்று கிடந்துள்ளது.
இதைபார்த்து அதிர்ச்சியடைந்த பழனிச்சாமி, தண்ணீர் பாட்டலில் பல்லி கிடப்பது குறித்து கேள்வி எழுப்பினார். இதனால் சுதாகரித்து கொண்ட தண்ணீர் பாட்டில் விற்பனை செய்த இளைஞர், அந்த பாட்டிலை வெடுக்கென்று பிடுங்கி அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதை பார்த்த சக பக்தர்கள் கூச்சலிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
உடனே, இது குறித்து பழனிசாமி சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோயில் வாசலில் இது போன்று சுகாதாரமற்ற நிலையில் விற்பனை செய்யும் எந்த பொருளையும் பக்தர்கள் வாங்க கூடாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தங்களுக்கு எந்த உணவு பொருட்கள் மீதோ சந்தேகம் ஏற்பட்டதால் தகவல் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.