கொரோனாவால் உலகமே கடுமையாக பாதிக்கப்பட்டு அதிலிருந்து இன்னும் முழுமையாக மீண்டு வர முடியாத நிலையில், குரங்கு காய்ச்சல் என்ற புதிய வகை பாதிப்பு பல்வேறு நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது.
இதுவரை ஆஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 12 நாடுகளில் 92 பேர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை உலக சுகாதார அமைப்பும் உறுதிப்படுத்தியுள்ளது. உடலில் வெப்பநிலை உயருதல், தலைவலி, முதுகுவலி, சின்னம்மை போன்று உடலில் கட்டி ஆகியவை குரங்கு காய்ச்சலுக்கு அறிகுறிகளாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. இது மனிதர்கள் மூலமாக பரவுகிறது. குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள கொப்புளங்களைத் தொடுதல், அவர்கள் பயன்படுத்திய துணிகள், படுக்கை விரிப்புகள், துண்டுகள் ஆகியவற்றை பயன்படுத்துதல் ஆகியவற்றின் மூலம், இந்த வைரஸ் பரவும்.
பெரியம்மை நோய்க்கு எதிரான தடுப்பூசி, குரங்கு காய்ச்சலைத் தடுப்பதில் சுமார் 85% பயனுள்ளதாக இருக்கும் என்று பல கண்காணிப்பு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.







