மத்திய பிரதேச மாநிலம் சிங்ராலியில் உள்ள பள்ளியில் முன் வரிசையில் அமர்ந்ததற்காக பட்டியலின மாணவரை ஆசிரியர் தாக்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அரசு பள்ளி ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி நடந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சிங்ராலியில் உள்ள பள்ளியில் , பாதிக்கப்பட்ட மாணவி பைதான் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இச்சம்பவத்தன்று ஆசிரியை சிங் வகுப்பறைக்குள் நுழைந்த போது, முன் பெஞ்சில் அமர்ந்திருந்த மாணவியை பார்த்ததும் அவளை கடுமையாக திட்டியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். அதில் சாதிய அவதூறுகளைப் பயன்படுத்தி என்னைத் திட்டினார் என்றும், தலையில் தொடர்ந்து அடித்ததாகவும், இதனால் நான் மயக்கமடைந்தேன் என்றும், அடுத்த இரண்டு முதல் மூன்று மணி நேரம் அதே நிலையில் இருந்ததாகவும் பாதிக்கப்பட்ட மாணவி கூறியிருந்தார். இந்த புகாரை வகுப்பில் உள்ள மற்ற மாணவிகளும் ஒப்பு கொண்டுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியை ஜாக்ரிதி சிங்குக்கு எதிராக, இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் 1989ஆம் ஆண்டு பட்டியல் சாதி மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம், 1989 இன் தொடர்புடைய விதிகளின் கீழ், மாவட்டக் கல்வி அதிகாரி (DEO) ஆதாரங்களைக் கண்டறிந்த பிறகு, வழக்குப் பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டது. விசாரணையில் மாணவிக்கு நிகழ்ந்தது உண்மையென கண்டறியப்பட்டது.
இதையடுத்து சிங்ராலி மாவட்ட நீதிபதி ராஜீவ் ரஞ்சன் மீனா, மாணவி மீதான தாக்குதல் தொடர்பாக ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறித்தியுள்ளார். மேலும் இது குறித்து நீதிபதி மீனா கூறுகையில், ஆசிரியர் மாணவியை திட்டியதும் அவரை அடிக்க புத்தகத்தைப் பயன்படுத்தி அடித்தார் என்பதும் விசாரனையில் தெரிய வந்துள்ளது. எனவே அவரை இடைநீக்கம் செய்வதற்கான செயல்முறையைத் தொடங்க சம்பந்தப்பட்ட துறைக்கு நாங்கள் கடிதம் எழுதியுள்ளோம் என கூறினார்.
ஆசிரியை ஜாக்ரிதி சிங் கடந்த காலங்களில் வேறொரு பள்ளியில் பணியமர்த்தப்பட்ட போதும் சாதிய அவதூறுகள் குறித்த புகார்களில் அவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.