மின் இணைப்புடன் ஆதார் எண்ணை உடனே இணைக்க வேண்டும் என்ற அறிவிப்பை தமிழக மின்வாரியத்துறை திரும்ப பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாகவும், அரசியலமைப்புக்குட்பட்டு செயல்பட வேண்டிய அமைப்புகளை பா.ஜ.க அரசு தங்களுக்காகப் பயன்படுத்தி வருகிறது என தொடர்ச்சியாக குற்றம்சாட்டினோம். தற்போது தலைமை தேர்தல் ஆணையர் நியமனத்தில் உச்ச நீதிமன்றமே பா.ஜ.க அரசுக்கு கண்டனம் தெரிவித்து விளக்கம் கேட்டுள்ளது என அவர் பேசினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், காசியில் நடைபெறும் தமிழ் சங்க தொடக்க விழாவில் தமிழைக் குறித்து புகழ்ந்து பேசிய மோடி தமிழ் மொழிக்கு எதுவும் செய்யவில்லை. மோடி அரசு பொறுப்பேற்று ஒவ்வொரு ஆண்டும் சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. தமிழுக்கு மிக மிக குறைவாகவே நிதி ஒதுக்கப்படுகிறது. மோடியின் உதடு தமிழை புகழ்ந்து பேசுகிறது ஆனால் உள்ளம் சமஸ்கிருதத்துற்கு தான் முக்கியத்துவம் தருகிறது என கூறினார்.
அத்துடன், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பல பிரச்சனைகள் உருவாக காரணமாகி வருகிறார். இந்தியா மதச்சார்பின்மை நாடு ஆனால் ஆளுநர் இந்தியாவை இந்துக்களின் நாடு என்கிறார். இது அரசியலமைப்பு சட்டற்றிற்கு எதிரானது. அதற்கு அவரை டிஸ்மிஸ் செய்திருக்க வேண்டும் என கூறினர்.
மேலும், இந்து, சனாதனம் போன்றவற்றைப் பேசி வந்த அவர் தற்போது மார்க்ஸ் குறித்து பேசுகிறார். மனு நீதியை உயர்த்திப்பிடிப்பது ஆர்.என்.ரவியின் கொள்கையாக இருக்கட்டும் அதை அவர் ராஜினாமா செய்து விட்டு ஆர்.எஸ்.எஸ் கொள்கையைப் பரப்பட்டும். ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி வரும் டிசம்பர் 29 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்த உள்ளோம். மின் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்க இரண்டு நாட்கள் மட்டுமே அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதை மின்சார வாரியம் கைவிட வேண்டும். கூடுதல் கால அவகாசம் கொடுக்க வேண்டும். மாதம் ஒரு முறை மின் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என கூறினர்.
அத்துடன், சட்ட பேரவையில் நிறைவேற்றும் தீர்மானம் மக்கள் நலன் சார்ந்தது. ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் விடுதலை விவகாரத்தில் ஆளுநரை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது. ஆன் லைன் சூதாட்டம் ரத்து உட்படச் சட்ட பேரவையில் நிறைவேற்றப்பட்ட 20 மசோதாக்கள் கிடப்பில் வைத்துள்ளார். ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பாக விளக்கம் கேட்க ஆளுநருக்கு உரிமை இருக்கிறது. அதை அவர் உடனடியாக செய்யாமல் காலம் தாழ்த்தி செய்வது உள்நோக்கம் கொண்டது. மோடி ஆதரவோடு போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகிறார் என்பதற்கான அடையாளம் இது. காவக் துறையால் தேடப்படுபவர்கள் அடைக்கலம் அடையும் இடமாக பா.ஜ.க இருக்கிறது. அவர்களுக்குப் பொறுப்புகளும் வழங்கப்படுகிறது. அந்த கட்சி வித்தியாசமான கட்சி எனவும் கூரினார்.