“உயிரை பிரிந்த பின்னும் வாழலாம்” – உறுப்பு தானம் குறித்து முதலமைச்சர் x பதிவு!

முதலமைச்சர் தனது X சமூக வலைத்தளப் பக்கத்தில், உறுப்பு தானம் குறித்த ஒரு நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார்.

 

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது X சமூக வலைத்தளப் பக்கத்தில், உறுப்பு தானம் குறித்த ஒரு நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார். அதில், உயிர்பிரிந்த பிறகு உடலுறுப்புகள் மண்ணுக்கோ, தீக்கோ இரையாகாமல், பிறரது வாழ்வுக்குத் துணைநிற்பதே ஒரு பெருவாழ்வு என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தான் துணை முதலமைச்சராக இருந்தபோதே தனது உறுப்புகளை தானம் செய்ய முடிவெடுத்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன் விடை கொடுக்கப்படும் என்று அறிவித்ததை அவர் நினைவுபடுத்தினார்.

இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள் முதல் (செப்டம்பர் 23, 2023), இதுவரை 479 பேர் (2024 ஆண்டில் மட்டும் 268 பேர்) தங்களது உறுப்புகளை தானம் செய்து, பல நூறு உயிர்களின் வாழ்வுக்குக் காரணமாக இருந்துள்ளனர்.

இந்த தன்னலமற்ற செயலுக்காக அவர்களுக்கு தனது வணக்கங்களைத் தெரிவிப்பதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகத் திகழ்வது கூடுதல் சிறப்பு என்றும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

இது, தமிழ்நாட்டு மக்கள் மற்றும் அரசு உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதை நடைமுறைப்படுத்துவதில் காட்டியுள்ள அர்ப்பணிப்பைக் காட்டியுள்ளது.

உறுப்பு தானம் என்பது ஒரு மனிதனின் மரணத்திற்குப் பின்னரும் மற்றொருவருக்கு வாழ்வு அளிக்கும் உன்னதமான செயல். முதலமைச்சரின் இந்த அறிக்கை, பொதுமக்களிடையே உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, மேலும் பலரை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.