நமது இந்தியத் திருநாட்டின் 75வது சுதந்திர தினத்தை சிறப்பாகக் கொண்டாடுவோம்; சுதந்திரத்தைப் பேணுவோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக சுதந்திர தின அமுதப் பெருவிழா என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது.
சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை பறக்கவிட வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், வரலாற்றின் குறிப்புகளைப் பகிர்ந்துகொண்ட பிரதமர், இந்தியாவின் முதல் பிரதமர் நேரு, முதல் தேசியக் கொடியை ஏற்றி வைத்த நிகழ்வையும் நினைவுகூர்ந்தார்.
சுதந்திர தின அமுதப் பெருவிழா என்ற பெயரில் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை செய்து வரும் நிலையில், தங்களது வீடுகளில் தேசியக் கொடி – என்ற இயக்கத்தின் மூலம் மேலும் தேசப்பற்றை வலுப்படுத்துவோம் என்றும், ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 15ம் நாள் வரை நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் மூவர்ண தேசியக் கொடியை பறக்க விடுங்கள் என்றும், இந்த இயக்கம் தேசியக் கொடியுடனான நமது இணைப்பை மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் நாட்டு மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
இவ்வாறு ஆகஸ்ட் 13 முதல் 15 வரை வீடுகளில் பறக்கவிடப்படும் தேசியக் கொடியை, இரவில் இறக்குவதற்கு தேவையில்லை என்றும், மூன்று நாட்களும் பறந்தவாறே இருக்கட்டும் என்றும், அதற்கேற்றவாறு விதிகள் திருத்தப்பட்டுள்ளன என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
தேசியக் கொடி என்றவுடன் நமது நினைவுக்கு வருவது கொடி காத்த குமரன் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் திருப்பூர் குமரன் அவர்கள்தான்.
அந்நியர் ஆட்சியில், நமது தேசியக் கொடியை காப்பதற்காக தனது இன்னுயிரைத் தியாகம் செய்த கொடி காத்த குமரன் முதல் அனைத்து விடுதலைப் போராட்டத் தியாகிகளையும் தீரர்களையும் 75வது சுதந்திர தின நன்னாளில் நினைவு கூர்வோம்.
அதிமுகவினர், பொதுமக்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் ஆகஸ்ட் 13முதல் 15வரை தேசியக் கொடியை ஏற்றி வைத்து, நமது இளம் சந்ததியினருக்கு சுதந்திரப் போராட்டம் வீரர்களின் தியாகத்தை எடுத்துக் கூறி நாட்டுப் பற்றையும், தேச ஒற்றுமையையும் வளர்க்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.