குடிபோதையில் காரை ஓட்டி மூன்று பேர் பலியான வழக்கிலிருந்து, காரில் பயணித்த பெண் மருத்துவரை விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
காரை ஓட்டாமல், பயணம் மட்டுமே செய்த நிலையில் தன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி லட்சுமி வழக்கு தாக்கல் செய்தார்.
குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய குற்றத்தில் ஓட்டுனர் மட்டுமல்லாமல், அவருடன் பயணித்த மற்ற இவருக்கும் சமமான பொறுப்பு உள்ளது. மருத்துவர் லட்சுமியை வழக்கிலிருந்து விடுவிக்க எவ்வித தகுதியும் இல்லை என கூறி மனுவை நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி நிராகரித்தார்.
முன்னதாக, சகோதரர் குடித்திருக்கிறார் என்று தெரிந்தும், வாகனம் ஓட்டுவதை தடுக்காமல் குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததால், அவர் மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது என காவல்துறை தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
2013ஆம் ஆண்டு நள்ளிரவில் மெரினா கடற்கரை சாலையில் கல்லூரி மாணவரான அன்பு சூர்யா குடிபோதையில் ஓட்டிய கார் மோதியதில் இரண்டு மீன் வியாபாரிகள், ஒரு தலைமை காவலர் பலியான நிலையில், மூன்று பேர் படுகாயமடைந்ததுடன், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் சேதமடைந்தது.
அன்புசூர்யா மீதும், அவருடன் பயணித்த மூத்த சகோதரி லட்சுமி, நண்பர் செபஸ்டியன் கிருஷ்ணன் ஆகியோர் மீது சென்னை காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.








