கேரள மாநிலத்தில் பெய்துவரும் கன மழை காரணமாக, 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் அதிகன மழை பெய்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பம்பை, மணிமாலா மற்றும் அச்சன்கோவில் உள்ளிட்ட ஆறுகளின் நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டியுள்ளது. பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு மற்றும் கண்ணூர் ஆகிய 8 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை அதிகனமழை எச்சரிக்கை விடுத்தது.
பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல்வேறு அணைகளில் நீர்மட்டம் அபாய அளவை எட்டியுள்ளது. கரமணா, நெய்யாறு, மணிமாலா, பம்பை, அச்சன்கோவில், தொடுபுழா, மீனாச்சில், காயத்ரி சளியாறு, பாரதபுழா, பெரியாறு, கொத்தமங்கலம், முவட்டுபுழா ஆகிய ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து, அபாய அளவைத் தாண்டியுள்ளது. இதனால், அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், தொடர் மழை காரணமாக இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்யும் என மத்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
-ம.பவித்ரா








