பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவர்களை பள்ளிக்கு உள்ளே அழைத்துச் சென்றார் அமைச்சர் அன்பில் மகேஸ்.
பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அரசு பள்ளிகள் சரியான முறையில் செயல்படுகிறதா, ஆசிரியர்கள் முறையாக மாணவர்களுக்கு முறையான கல்வி கற்றுத்தருகிறார்களா என பல்வேறு பகுதியில் உள்ள அரசு பள்ளிகளை ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் சென்னையை அடுத்த நங்கநல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு செய்தார்.
சில மாணவர்கள் பள்ளிக்கு வெளியே நிற்பதை கண்ட அமைச்சர், அவர்களிடம் உரையாடினார். இவ்வளவு தாமதமாக வரலாமா, தற்போது நேரம் என்ன ஆகிறது, எவ்வளவு தொலைவில் இருந்து வருகிறீர்கள், இந்த வயதில் பள்ளிக்கு வருவதை விட வேறு என்ன வேலை வேண்டி கிடக்கிறது என்று விசாரித்தார்.
பின்னர் மாணவர்களை அழைத்து கொண்டு பள்ளிக்குள் சென்ற அமைச்சர், தாமதமாக வரும் மாணவர்களை பள்ளிக்கு வெளியே நிற்க வைக்க கூடாது. பள்ளிக்குள் அழைத்து வந்து உரிய விளக்கம் கேளுங்கள் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர் ஒவ்வொரு வகுப்பறையாக சென்ற அமைச்சர் மாணவர்களுக்கு வருகை பதிவு எடுத்தார். மழலையர் வகுப்புகள் எப்படி செயல்படுகிறது என ஆய்வு செய்தார். பின்னர் சுற்றுச்சூழல் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துணி பைகளை வழங்கினார்.







