இயக்குநர் பாரதிராஜா இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் பாரதிராஜா திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். வழக்கமான சர்க்கரை அளவு பரிசோதனைக்காக நேற்று மருத்துவமனை சென்ற அவருக்கு, உடலில் உப்பின் அளவும் நீர்ச்சத்தின் அளவும் குறைவாக இருப்பது தெரியவந்தது. பாரதிராஜா மிகவும் சோர்வாக இருந்ததால் அவருக்கு ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுரை வழங்கினர். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இயக்குனர் பாரதிராஜாவை கவிஞர் வைரமுத்து மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். பின் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் “மருத்துவமனையில் பாரதிராஜாவைப் பார்த்தேன், நலிந்த நிலையிலும் நகைச்சுவை தீரவில்லை. சின்ன சின்னப் பின்னடைவுகளைச் சீர்செய்யச் சுத்த மருத்துவர்கள் சூழ நிற்கிறார்கள். அல்லி நகரத்தை டில்லி நகரத்திற்கு அழைத்துச் சென்ற மகா கலைஞன் விரைவில் மீண்டு வருவார், கலையுலகை ஆண்டு வருவார்.” எனப் பதிவிட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இயக்குநர் பாரதிராஜா இன்னும் இரண்டு அல்லது மூன்று தினங்கள் மருத்துவமனையில் ஓய்வில் இருப்பார், பிறகு வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. பாரதிராஜா நலம்பெற்று வீடு திரும்ப திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.