சட்டமன்றத்தை பொறுத்தவரை சட்டப்பேரவைத் தலைவர் தான் இறுதி முடிவு அவர் என்ன முடிவு எடுக்கிறாரோ அதற்கு கட்டுப்படுவோம் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நாளை சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூட உள்ளது குறித்த கேள்விக்கு.? பதிலளித்த அவர், தமிழக மக்களுக்கு அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது போன்ற பல்வேறு பிரச்சனைகளை எல்லாம் எதிர்க்கட்சி என்ற முறையில் பல்வேறு வாதங்களை முன்வைத்து அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வோம் என்று கூறினார்.
சபாநாயகருக்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் வேறு ஒருவரை நியமனம்
செய்ததாக கடிதம் கொடுத்ததை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறீர்கள் என்ற
கேள்விக்கு பதிலளித்த அவர், சட்டமன்றத்தை பொறுத்தவரை சட்டப்பேரவைத் தலைவர் தான் இறுதி முடிவு அவர் என்ன முடிவு எடுக்கிறாரோ அதற்கு கட்டுப்படுவோம் என்றார்.
எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் என எதிர்க்கட்சி எதிரெதிரே இருந்தாலும் நாளை அருகருகே இருக்கை ஒதுக்கி உள்ளார்கள் என்ற கேள்விக்கு.? எதிரெதிரே இருக்கிறோம் என நீங்கள் தான் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் அதிமுக எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ, எவ்வாறு அதே வழியில் ஜெயலலிதா அதனை பெரும் இயக்கமாக உருமாற்றி காட்டினாரோ, அதற்கு வலு சேர்க்கும் வகையில் தான் எங்களுடைய நடவடிக்கை இருக்கும்.
ஒன்றரை கோடி தொண்டர்கள் இந்த இயக்கத்தை தாங்கி பிடித்து 50 ஆண்டு காலம் உயிர்ப்பித்த இயக்கமாக வைத்திருக்கிறோம். தொண்டர்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அடிப்படை உறுப்பினர்கள் எந்த நேரத்திலும் பாதிக்கப்பட விடக்கூடாது என்ற நோக்கத்திற்காக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் தொண்டர்களுக்கு மிகப்பெரிய அந்தஸ்தை, உரிமைகளை வழங்கியுள்ளார். அந்த உரிமை எந்த நிலையிலும் பறிபோகவிடாமல் தடுப்பது தான் எங்கள் நோக்கம். சாதாரண தொண்டன் கூட கழகத்தின் உச்சபட்ச பதவிக்கு போட்டியிடுவதற்கு உரிமை இருக்கிறது.
அதற்கு 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேண்டும் 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும். போட்டியிடுவதற்கு தலைமைக் கழக நிர்வாகியாக ஐந்து ஆண்டுகள் இருக்க வேண்டும். கழக சட்ட விதிகளை புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி எவ்வாறு உருவாக்கி இருக்கிறார்களோ, அதன்படி தான் நடக்க வேண்டும் அதற்காகத் தான் நாங்கள் இப்போது தர்ம யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
அதிமுகவை ஒன்றிணைப்பது குறித்து சுற்றுப்பயணம் மேற்கொண்டீர்கள். தற்போது அதன் நடவடிக்கையில் எவ்வாறு உள்ளது என்ற கேள்விக்கு.? சுற்றுப்பயணம் ஆரம்பிப்பதற்கு முக்கிய தலைவர்களை, முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எம்ஜிஆர் உடன் இருந்தவர்கள் அவர்கள் மீது பாசமும் பற்றும் இருப்பவர்களை தான் நான் சந்தித்து வருகிறேன் என்று கூறினார்.




