தமிழகத்திற்கு மத்திய அமைச்சர்கள் வருகையின் நோக்கம் என்ன என்பதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.
சென்னை மடிப்பாக்கத்தில் நடைபெற்ற மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் , செல்வ மகள் சேமிப்புத் திட்டம் உள்ளிட்ட 7 நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய தொழில் மற்றும் ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, சென்னை மாநகரத்தின் 75 மண்டலங்களிலும் மத்திய அரசின் நலத்திட்டங்களுக்கான படிவங்கள் வழங்கப்படுகின்றன. ஆத்ம நிர்பார் கால கட்டத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 400 பில்லியன்-ஐ கடந்துள்ளது. இதற்கு காரணம் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தான். 7 சதவீதத்திற்கு மேல் வளர்ச்சி நடைபெறும் நாடாக இந்தியா இருப்பதாக ஐஎம்எப் கூறியுள்ளது.
பிரதமரின் உத்தரவுப்படி மத்திய அமைச்சர்கள் தமிழகத்தில் பயனாளிகளை சந்தித்து, மத்திய அரசின் திட்டங்கள் முறையாக சென்றடைந்துள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர். தமிழகத்திற்கு 76 அமைச்சர்களை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுவரை 20 அமைச்சர்களை தமிழகத்திற்கு அனுப்பியுள்ளனர். அடுத்த 20 நாளில் 50 அமைச்சர்கள் தமிழகத்திற்கு வருகை தரவுள்ளனர். லஞ்சம் இல்லாமல் மத்திய அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என பார்வையிட அமைச்சர்கள் வருகை தருகின்றனர் என தெரிவித்தார்.
7 திட்டங்கள் இன்று சென்னையில் நடைபெறும் முகாம்களில் பதிவு செய்யப்படுகிறது.
விபத்து காப்பீடு, ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு, தொழிலாளர் ஓய்வூதிய
திட்டம், செல்வ மகள் சேமிப்பு திட்டம், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான
அட்டைகள் உள்ளிட்டவை பதிவு செய்து அவற்றை வங்கிகளிலும், அலுவலகங்களிலும் விண்ணப்பிக்க பாஜக உதவுகிறது.
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு இதுவரை எந்த அரசும் அனைத்து அமைச்சர்களையும் தமிழகத்திற்கு அனுப்பிய வரலாறு கிடையாது. ஆனால், தற்போது பாஜக அரசு 76 மத்திய அமைச்சர்களை ஒரே மாதத்தில் தமிழகம் அனுப்புகிறது.







