இந்திய துணைகண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணில் இருந்து எழுதப்படட்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழின் இலக்கியச் செழுமையை உலகறியச் செய்யும் வகையில் பொருநை இலக்கியத்
திருவிழா தமிழ்நாடு அரசு சார்பில் இரண்டு நாட்கள் நெல்லை மாநகரில் நடைபெறுகிறது.
பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கத்தில் நடந்த தொடக்க விழாவில் ஒளி-ஒலிக் காட்சி வழியாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது பேசிய அவர், “தமிழ்ச் சமூகம் இலக்கிய முதுர்ச்சியும், பண்பாட்டின் உச்சத்தையும் அடைந்த பெருமைக்குரிய சமூகம். கீழடி, சிவகளை, கொற்கை போன்ற அகழ்வாய்வு வழியாகவும் பல்வேறு முன்னெடுப்பு வழியாகவும் அறிவியல் பூர்வமாக நிறுவப்படும் தொன்மை, நமது பெருமை. இதனை அடுத்த தலைமுறைக்கு எடுத்து சென்று அறிவுசார் சமுகத்தை வார்த்தெடுக்கும் இலக்குடன் இலக்கிய திருவிழாக்கள் நடக்க உள்ளது.
தமிழின் இலக்கிய செழுமையை போற்றும் வகையில் பொருநை, காவிரி, வைகை, சிறுவாணி, சென்னை போன்ற 5 இலக்கிய திருவிழாக்கள் நடத்தப்பட உள்ளது. அதன் முதல் நிகழ்வாக அன்னை மடியான நெல்லை பொருநை நகரத்தில் நடத்தபடுகிறது. அறிவை விரிவுசெய் அகண்டமாக்கு என பாவேந்தர் சொல்லுக்கு இணங்க தமிழ் மண்ணின் செழுமைகளை உலகுக்கு எடுத்துரைக்க பொருநை இலக்கிய விழா அமையட்டும். இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணில் இருந்து எழுதப்படட்டும்” என்றார்.
அவரைத் தொடர்ந்து விழாவில் பேசிய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்
ராஜகண்ணப்பன், “திருநெல்வேலி என்றால் தியாக வரலாறு உள்ள பூமி. இந்த மண்ணில் பொருநை இலக்கிய திருவிழா தொடங்கப்பட்டுள்ளது பெருமைக்குரியதாகும். 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இது போன்ற விழாவை யாரும் நடத்தியதில்லை.
இதற்காக பள்ளிக் கல்வித்துறையை பாராட்டுகிறேன்.
தமிழகத்தில் அதிக துறைகள் இருக்கும்போது பள்ளிக் கல்வித்துறைக்கு முதல்வர் அதிக முக்கியத்துவம் அளிக்கிறார். அதிக நிதி ஒதுக்கப்படுகிறது என்றால் இந்த விழாவை சான்றாக கொள்ளலாம். கல்வியை கற்றுகொடுக்கும் சிறந்த இடமாக தமிழகம் விளங்குகிறது. ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் என 88% பேர் தமிழகத்தில் வாழ்கின்றனர். திராவிட மாடல் என்பது சித்தாந்தம். அதனை தமிழக முதல்வர் கையிலெடுத்துள்ளார்.
இல்லம் தேடி கல்வி, மக்களைத்தேடி மருத்துவம் என மக்கள் நலம் சார்ந்த திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது. இந்திய அளவில் 14வது இடத்தில் இருந்த தமிழக தொழில்துறை, தற்போது 3வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. நம்பர் 1 என்ற நிலைக்கு தமிழகத்தை உயர்த்த முதல்வர் உழைத்துக் கொண்டிருக்கிறார். தமிழ் மொழிக்கு சிறப்பு சேர்க்கின்ற ஆட்சி நடக்கிறது. வரலாற்றை உருவாக்கும் தலைவர்கள் தான் நிலைத்து இருப்பார்கள். அத்தகைய வரலாற்றை உருவாக்கியவர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்” என்று பேசினார்.
தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், “மொழியை காக்க மொழிப்போரும் எங்களால் நடத்த முடியும். பெருமைப்படுத்த இதுபோன்ற இலக்கிய நிகழ்வுகளும் நடத்த முடியும். இந்தியாவுக்கே முன்னோடியான திட்டம், ’இல்லம் தேடி கல்வி’ திட்டம். நெல்லை மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் வசிக்கும் காணி மலைக்கிராமங்களிலும் இல்லம் தேடி கல்வி செயல்படுத்தப்பட்டு வருகிறது. எந்த ஆட்சியிலும் இல்லாத வகையில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழா நடத்தப்படுகிறது.
தமிழின் பெருமையை பறைசாற்றும் அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. தமிழக மக்கள் தொகையில் 6ல் ஒருவர் அரசுப் பள்ளி மாணவராக இருப்பது எங்கள் துறைக்கு பெருமை. அரசுப் பள்ளி என்றால் வறுமையில் இருப்பவர்களுக்கு என்ற நிலையை மாற்றி அரசுப் பள்ளி என்றால் பெருமை மிகுந்தது என்ற நிலையை உருவாக்கி வருகிறோம். குழந்தைகளுக்கு இலக்கியத்தை கொண்டு செல்ல வேண்டும் என்பது நமக்கு கடமையாக உள்ளது. அடிப்படை வாசிப்பை கூட பிற்போக்குவாதிகளின் பேராயுதமாக மாற்ற நினைக்கிறார்கள். முதலமைச்சர், எழுத்தாளர்களுக்கு எழுத்துக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தின் அடையாளமே கனவு இல்லம் திட்டம். எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், படைப்பாளிகள், தமிழ்மொழி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கும் ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது” என்று தெரிவித்தார்.