திமுக பவளவிழாவை ஒட்டி, கட்சியினர் இல்லங்கள், அலுவலகங்களில் கட்சிக்கொடியை பறக்கச் செய்யுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“பெரியாரின் கொள்கைகளை ஜனநாயக வழியில் சட்டங்களாகவும், திட்டங்களாகவும் நிறைவேற்றிடும் நோக்கத்துடன் அண்ணா-வால் 1949-ம் ஆண்டு தொடங்கப்பட்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் கட்டிக் காக்கப்பட்ட திமுக எனும் அரசியல் பேரியக்கம், 75 ஆண்டுகளாக மக்களுக்குப் பணியாற்றி, இந்த 2024-ம் ஆண்டு தனது பவள விழா நிறைவினைக் கொண்டாடுகிறது.
பவளவிழாவையொட்டி கழகக் கொடிக் கம்பங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு, அதில் அந்தந்தப் பகுதியில் கழகத்திற்காக அல்லும் பகலும் உழைத்த மூத்த முன்னோடிகளின் கரங்களால் நம் இருவண்ணக் கொடியை ஏற்றிப் பட்டொளி வீசிப் பறந்திடச் செய்திட வேண்டும்” என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி வீதிகள்தோறும் பறக்கும் இருவண்ணக்கொடி நம் வீடுகள்தோறும் பறந்திட வேண்டும். கழகக்கொடி பறக்காத கட்சியினர் வீடுகளே இல்லை என்னும் வகையில் பவளவிழாவை முன்னிட்டு நம் அனைவரது இல்லங்கள் அலுவலகங்கள், வணிக வளாகங்களில் கட்சிக்கொடி ஏற்றிக் கொண்டாடுவோம்”
இவ்வாறு அந்த அறிக்கையில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.







