‘லியோ’ திரைப்படம் நடிகர் விஜய்-ன் திரைப்பயணத்தில் ஒரு சிறந்த திரைப்படமாக இருக்கும் என படத்தை பார்த்த ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் லியோ. த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் பிரமாண்டமாக இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது.
க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது முதலே பெரும் எதிர்பார்ப்பை சம்பாதித்திருந்த லியோ திரைப்படம், இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியாகும் ‘லியோ’ திரைப்படம், தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் ரசிகர்களை தன்வசம் கட்டிப்போட்டுள்ளது.
தமிழ்நாட்டில் லியோ படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு திரையிடப்படும் நிலையில், அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் அதிகாலை 4, 5 மணிக்கே முதல் காட்சி திரையிடப்பட்டது. அம்மாநிலங்களில் உள்ள விஜய் ரசிகர்கள் விடிய விடிய கொண்டாடத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படியுங்கள் : அண்டை மாநிலங்களில் வெளியானது ‘லியோ’ – விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்!!
கேரளாவில் அதிகாலை 4 மணி காட்சியை பார்த்துவிட்டு வந்த ரசிகர்கள், ‘லியோ’ படம் ஒரு தரமான சம்பவம் என தெரிவித்துள்ளனர். படத்தின் எந்த ஒரு சீனையும் மிஸ் பண்ண வேண்டாம் எனவும், ஒவ்வொரு சீனிலும் சர்ப்ரைஸ் காட்சிகள் உள்ளது எனவும் கூறினர். நிறைய காட்சிகளை மியூட் செய்திருப்பதாக தெரிவித்த ரசிகர்கள், நடிகர் விஜய்-க்கு சிறந்த படமாக ‘லியோ’ இருக்கும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.








