புதுக்கோட்டையில் மாவட்ட ஆட்சியரிடம் விடுமுறை விட வேண்டும் என்று மாணவர்கள் சமூக வலைதளத்தில் குறுஞ்செய்திகள் மூலம் கோரிக்கை விடுத்த சம்பவம் இணையவாசிகள் மத்தியில் சிரிப்பலையை கிளப்பியுள்ளது.
விடுமுறை என்ற சொல்லைக் கேட்டாலே பள்ளிக் குழந்தைகளின் முகத்தில் ஓர் அளவற்ற புன்னகை பூக்கும். அதுவும் மழைக்காலம் தொடங்கினாலே, எப்போது மழை பெய்யும், எப்போது விடுமுறை விடுவார்கள் என்று ஆவலோடு காத்துக் கொண்டிருப்பர். பள்ளிப் பருவத்தில் நாம் அனைவருமே இந்த தருணங்களை கடந்து வந்திருப்போம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மழைக்காலங்களில் காலை 6 மணிக்கே எழுந்து, தொலைக்காட்சியின் முன் உட்கார்ந்து நமது மாவட்டத்தில் விடுமுறை விடப்பட்டுள்ளதா, விடப்படுகிறதா என செய்தி சேனல்களை பார்த்துக் கொண்டிருக்கும் வழக்கம் இன்றைய தலைமுறையினரிடமும் காணப்படுகிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் வளர்ந்த இன்றைய சூழலில், ஒரு படி மேலே சென்று, விடுமுறை விட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கே சமூக வலைதளத்தில் மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். புதுக்கோட்டையில் அரங்கேறியுள்ளது இந்த சம்பவம்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருப்பவர் கவிதா ராமு. இவரிடம் மாணவர்கள் சிலர், இன்ஸ்டாகிராமில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விட வேண்டும் என்று பல விதமாக குறுஞ்செய்திகள் அனுப்பி கோரிக்கை விடுத்துள்ளனர். ’நாளைக்கு லீவ் விடுங்க மேம் ப்ளீஸ்’, ’ தேர்வில் மார்க் வாங்கலன்னா எல்லாரும் கேப்பாங்க மேம். உங்களையே நம்பியிருக்கேன்’ , ‘லீவ் விட்டதற்கு நன்றி மேம். உங்களை மறக்கவே மாட்டேன். என் தேவதை நீங்கள்’ என்று நகைச்சுவையாக கோரிக்கைகளும், மழையை முன்னிட்டு விடுமுறை அளித்ததற்கு நன்றியும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்த படங்களை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.