கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் நலம் பெற்று மீண்டு வர பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சற்று உடல்நலக்குறைவுடன் இருந்ததால் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து பல்வேறு அரசியல் தலைவர்களும் முதலமைச்சர் விரைவில் நலமுடன் மீண்டு வர வேண்டும் என நலம்விசாரித்துள்ளனர்.
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்ற செய்தியை அறிந்தேன். அவர் பூரண குணமடைந்து மக்கள் சேவைக்கு விரைந்து வர இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/CMOTamilnadu/status/1546834899507630080
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தனது ட்விட்டர் பதிவில், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள செய்தியறிந்தேன். அவர் நோய்த் தொற்றிலிருந்து விரைந்து குணமாகி, முழு உடல்நலத்தோடு பொதுப்பணிகளைத் தொடர வேண்டுமெனும் பெருவிருப்பத்தைத் தெரிவிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் அயராது தமது பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் இன்று கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு தம்மை தனிமைப்படுத்திக் கொண்டதாக அறிவித்திருக்கிறார். முதலமைச்சர் விரைவில் பூரண நலம் பெற்று தனது மக்கள் நலப்பணிகளை தொடர வேண்டுமென விழைகிறேன் என்று கூறியுள்ளார்.







