இமாச்சலப் பிரதேசத்தின் 17வது முதலமைச்சராக பதவியேற்றுள்ள சுக்விந்தர் சிங் சுகுவின் அரசியல் பயணம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள நாதோன் கிராமத்தில், விவசாய குடும்பத்தில் 1964ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி பிறந்தவர் சுக்விந்தர் சிங் சுகு. இவரின் தந்தை ரஷில் சிங், இமாச்சலப் பிரதேச போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றியவர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சட்டக்கல்லூரி மாணவரான சுக்விந்தர் சிங் சுகு, கல்லூரி பருவத்திலேயே காங்கிரஸ் கட்சியின் இந்திய தேசிய மாணவர் சங்கமான, என்எஸ்யூஐ-ல் இணைந்து பணியாற்ற தொடங்கினார். அதன்பிறகு, 1998 முதல் 2008 வரை மாநில இளைஞர் காங்கிரஸின் தலைவராக சுக்விந்தர் சிங் சுகு பணியாற்றி உள்ளார். தன்னுடைய தொடக்க காலத்தில் பால் விற்பனையாளராகவும் அவர் வேலை பார்த்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் படிப்படியாக வளர்ந்துவந்த சுக்விந்தர் சிங் சுகு, 2013ம் ஆண்டு இமாச்சல பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக உயர்ந்தார். 13-வது இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலின்போது, நாதோன் தொகுதியில் இருந்து, இவர் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக சுக்விந்தர் சிங் சுகு பதவி வகித்துள்ளார்.
ஆனால், காங்கிரஸ் இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியில் இருந்த காலத்தில், சுக்விந்தர் சிங் சுகு எந்த முக்கிய பொறுப்பும் வகித்தது இல்லை. சமீபத்தில் நடந்துமுடிந்த தேர்தலில் பாஜகவை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூரை 37 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் சுக்விந்தர் சிங் சுகு வென்றார். இதையடுத்து அவர் இன்று இமாச்சலப் பிரதேச முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.