லதா மங்கேஷ்கர் பிறந்த நாள்; 40 அடி நீளமுள்ள வீணை திறப்பு

லதா மங்கேஷ்கரின் பிறந்தநாள் தினமான இன்று அவரது நினைவை போற்றும் வகையில் 40 அடி நீளமுள்ள வீணையை, உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியாவில் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்தியாவின் இசைக்குயில்…

லதா மங்கேஷ்கரின் பிறந்தநாள் தினமான இன்று அவரது நினைவை போற்றும் வகையில் 40 அடி நீளமுள்ள வீணையை, உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியாவில் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இந்தியாவின் இசைக்குயில் என்றழைக்கப்படும் பிரபல பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கடந்த பிப்ரவரி மாதம் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவரது 93வது பிறந்த  நாளை முன்னிட்டு,  அயோத்தியாவில் சரயு நதிக்கரையில் 7.9 கோடி மதிப்பில் வீணையுடன் பிரம்மாண்ட சதுக்கம் நிறுவப்பட்டுள்ளது. இந்த வீணை 40 அடி நீளமும், 14 டன் எடை கொண்டதாகும். இந்த வீணையை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி ஆகியோரும் பங்கேற்றனர்.

தொடர்ந்து காணொளி காட்சி வாயிலாக பேசிய பிரதமர் மோடி, பிரபல பின்னணி பாடகியான பாரத ரத்னா லதா மங்கேஷ்கரின் பிறந்த தினமான இன்று, அவருக்கு நாட்டுமக்கள் மற்றும் என் சார்பாகவும் மனமார்ந்த அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்வதாக கூறினார். மேலும், அவருடன் எனக்கு நிறைய இனிமையான நினைவுகள் உள்ளன. ஒவ்வொரு முறையும் அவரது பாடல்களை கேட்கும் போதும் அவர் குரல் என்னை மயக்கும். அயோத்தியில் ராமர் கோவிலின் பூமி பூஜை முடிந்தவுடன் மகிழ்ச்சியில் என்னை அழைத்தார்.

அயோத்தியில் உள்ள லதா மங்கேஷ்கர் நினைவாக நிறுவப்பட்ட சரஸ்வதியின் பெரிய வீணை இசை நல்லிணக்கத்தின் அடையாளமாக மாறும். அந்த வீணையில் உள்ள 92 வெள்ளை பளிங்கு கற்களால் செய்யப்பட்ட தாமரை லதா மங்கேஷ்கரின் 92 வயது வரையிலான வாழ்நாளை சித்தரிக்கிறது. இன்று அயோத்தியில் உள்ள சாலை ஒன்றுக்கு அவரது பெயர் சூட்டப்படுவதில் மகிழ்ச்சியடைவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.