வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இஷான் கிஷன் அபாரமாக விளையாடி இரட்டை சதமடித்து சாதனை படைத்துள்ளார்.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையே மிர்புரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 5 ரன் வித்தியாசத்திலும் வங்காளதேச அணி ‘திரில்’ வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் இந்தியா-வங்கதேசம் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் இன்று நடக்கிறது. தொடரை இழந்து தவிக்கும் இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக காயம் காரணமாக கேப்டன் ரோகித் சர்மா, வேகப்பந்து வீச்சாளர்கள் தீபக் சாஹர், குல்தீப் சென் ஆகியோர் போட்டியில் இருந்து விலகி உள்ளனர். இதையடுத்து சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் அணியில் இணைந்துள்ளார்.
இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளது. இந்த போட்டியில் காயமடைந்த கேப்டன் ரோகித், தீபக் சகாருக்கு பதிலாக இஷன் கிஷன், குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் 8 பந்தில் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
மற்றொரு தொடக்க வீரரான இளம் வீரர் இஷான் கிஷன் அதிரடியாக பேட்டிங் ஆடி வேகமாக ஸ்கோர் செய்து நல்ல தொடக்கத்தை இந்திய அணிக்கு அமைத்து கொடுத்தார். 3வதாக இறங்கிய கோலி, இஷான் கிஷனுடன் இணைந்து சிறப்பாக ஆடினார். அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் சதமடித்தார்.
இஷான் கிஷன் சதத்திற்கு பின்னர் அதிரடியாக விளையாடி சிக்ஸர் மழை பொழிந்து இரட்டை சதத்தை கடந்து சாதனை படைத்தார். இறுதியில் 10 சிக்ஸர்கள், 23 பவுண்டரிகள் அடித்து, 210 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். விராட் கோலி தனது சதத்தை நிறைவு செய்து களத்தில் விளையாடி வருகிறார்.
இதையடுத்து இரட்டை சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் 4வதாக இஷான் கிஷான் இணைந்துள்ளார். இதுவரை குறைவான பந்துகளில் இரட்டை சதம் அடித்தவர் என்ற சாதனையை மேற்கிந்திய அணியின் கிரிஸ் கெயில் பெற்றிருந்தார். இதன்மூலம் மேற்கிந்திய அணியின் கிரிஸ் கெயில் சாதனை இஷான் கிஷான் முறியடித்தார்.