லட்சத்தீவு எம்.பி. முகமது ஃபைசலுக்கு எதிரான கொலை முயற்சி வழக்கில், அவரது மேல்முறையீட்டு மனுவை கேரள உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது முறையாக அவரை தகுதிநீக்கம் செய்து மக்களவை செயலகம் உத்தரவிட்டுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முகமது பைசல் லட்சத்தீவு மக்களவை எம்.பி.யாக இருந்த நேரத்தில், கொலை முயற்சி வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு, 10 ஆண்டு சிறை தண்டனையும் அவருக்கு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவரை எம்.பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்து மக்களவை செயலகம் கடந்த ஜனவரி 13 அன்று உத்தரவிட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நடவடிக்கையால் ஃபைசலின் எம்.பி. பதவி பறிக்கப்பட்ட நிலையில், அமர்வு நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக கேரள உயர்நீதிமன்றத்தில் ஃபைசல் மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த உயர்நீதிமன்றம், ஃபைசலுக்கு எதிராக அமா்வு நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குத் தற்காலிகமாக தடை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து ஃபைசலுக்கு எதிரான தகுதிநீக்க நடவடிக்கையை மக்களவைச் செயலகம் ரத்து செய்ததால், அவர் மீண்டும் எம்.பி.யானார்.கேரள உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக லட்சத்தீவு யூனியன் பிரதேச நிர்வாகம் சார்பில், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கேரள உயர்நீதிமன்றத்தின் தற்காலிக தடை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் பைசலின் மனுவை மீண்டும் விசாரிக்க கேரள உயா்நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், ஃபைசலின் மனுவை கேரள உயர்நீதிமன்றம் நேற்று முன்தினம் விசாரித்தது. அப்போது ஃபைசல் குற்றவாளி என்று அமர்வு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்து, ஃபைசலின் முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து, மக்களவைச் செயலகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவைக் கருத்தில்கொண்டு, ஃபைசல் தகுதிநீக்கம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் அவர் இரண்டாவது முறையாகத் தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் அவரின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டுள்ளது.