இலங்கை அரசில் எந்த வேலையும் இல்லாத ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் இருப்பதாக அந்நாட்டு அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அன்னிய செலவாணி கையிருப்பு குறைந்ததன் காரணமாக தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் அத்தியாவசிய தேவைகளான அரிசி, பருப்பு, உளுந்து உள்ளிட்ட பொருட்கள், மருந்துகள், எரிபொருட்கள் போன்றவைகளின் விலைகள் விண்ணை முட்டும் அளவிற்கு உள்ளது. இதனால் இலங்கை மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் இலங்கை மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். இதையடுத்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில் சிங்கள ஊடகமொன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் ஒருவர், இலங்கை அரசில், எந்த வேலையும் இல்லாத ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், அரச சேவையில் 16 இலட்சம் பேர் உள்ளனர். அதில் மூன்றில் ஒரு பங்கினர் தொழிலாளர்கள், சாரதிகள் மற்றும் அலுவலக ஊழியர்கள். இதில் நிரந்த வேலையில்லாமல் ஒப்பந்த ஊழியர்களும் அடங்குவர். தற்போதுள்ள அரசு ஊழியர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இல்லாவிட்டாலும் அரச சேவையை தடையின்றி செய்யமுடியும். குறிப்பிட்ட பணி ஒதுக்கீடு இல்லாமல் அரசு ஊழியர்களை பராமரிப்பதில் சிக்கல் நிலவுகிறது என குறிப்பிட்டுள்ளார்.







