கேப்டன் படத்தில் இயக்குநர் இரண்டு முறை தன்னை கொலை செய்யப்பார்த்தார் என்றும் அந்த அளவிற்கு கடினமான உழைப்பை வெளிபடுத்தியுள்ளோம் என நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார்.
நடிகர் ஆர்யாவும், இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜனும் மீண்டும் இணைந்துள்ள படம் கேப்டன். ஆக்சன் த்ரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ள கேப்டன் படத்தை ஆர்யாவின் தி ஷோ பீப்பிள் மற்றும் திங் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளது. இந்த படத்தை தமிழ்நாட்டில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
ஆர்யாவுடன் சிம்ரன், ஐஷ்வர்யா லட்சுமி, ஹரிஷ் உத்தமன், தவுபிக் ஷெர்ஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இமான் இசையமைத்துள்ள இந்த படத்திலிருந்து யுவன் பாடிய நினைவுகள் என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. அறிவியல் மற்றும் மிருகங்களை மையப்படுத்தி படங்களை எடுப்பவர் சக்தி சௌந்தர் ராஜன். இவர் இயக்கத்தில் வெளிவந்த நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக், டெடி, ஆகிய படங்கள் வரவேற்பை பெற்றன.
அடுத்த மாதம் 8ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை ராயபேட்டை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் ஆர்யா, ஐஸ்வர்யா லட்சுமி, இமான், மதன் கார்க்கி, சந்தானம், தயாரிப்பாளர் தாணு, ஆர்பி.சவுத்ரி, விஷ்ணு வர்தன், அமீர், சரண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஆர்யா, கேப்டன் தலைப்பு ஆர்பி. சௌத்ரி தான் எனக்கு கொடுத்தார். அவருக்கு நன்றி.
இயக்குனர் மீதுள்ள நம்பிக்கை தான் இப்படம். டெடி படம் கதை சொல்ல வரும்போது இயக்குனருக்கு கதை சொல்ல தெரியாது. இப்போது நன்றாக இம்ப்ரூவ் செய்துள்ளார். இப்படத்திற்கு இமானின் இசை முதுகெலும்பாக இருந்துள்ளது. இரண்டு முறை தன்னை இயக்குனர் கொலை செய்யப்பார்த்தார். அந்த அளவுக்கு கஷ்டப்பட்டு நடித்தோம். ஐஸ்வர்யாவின் ரொமான்ஸ் எல்லாம் பயங்கரமாக இருக்கும் என கூறினார்.
-இரா.நம்பிராஜன்








