அஇஅதிமுக அவைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் மறைவுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக அவைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து வருந்துகிறேன். அவரின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 14 வயது முதலே பொது வாழ்வில் அடியெடுத்து வைத்த மதுசூதனன், கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் போற்றும் தலைவராகத் திகழ்ந்தவர் ஆவார்.
அனைவரையும் அரவணைத்துச் செல்லும் உயர்ந்த குணமும், அமைதியும், இயல்பிலேயே கொண்டிருந்த தலைவராக அவர் திகழ்ந்தார். மாநில அரசின் கைத்தறித் துறை அமைச்சராகவும் அஇஅதிமுகவின் அவைத் தலைவராகவும் அவர் ஆற்றிய பணிகள் தமிழக வரலாற்றில் நிரந்தர இடம் பிடிக்கும் என்பது உறுதி. அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை நான் வேண்டிக்கொள்கிறேன்” என இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.







