திரைப்படத்தின் பிரம்மாண்டத்தை ஒளிப்பதிவு மூலம் ரசிகர்களை உணரச் செய்த கே.வி.ஆனந்த், மரணமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கே.வி.ஆனந்தின் வாழ்க்கைப் பயணம்: 1966-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி, சென்னையில் பிறந்தார் கே.வி.ஆனந்த். புகைப்படம் எடுப்பதில் பேரார்வம் கொண்ட அவர், பத்திரிகைகளில் புகைப்பட கலைஞராகப் பணியாற்றியுள்ளார். பின்னர், திரைப்படங்கள் மீதான தீரா காதலால், தொடர் முயற்சியில் ஈடுபட்ட அவர், 1994-ஆம் ஆண்டு வெளியான ‘தென்மாவின் கொம்பத்து’ என்ற மலையாள திரைப்படத்தின் மூலம், ஒளிப்பதிவாளராக அறிமுகமானார்.
முதல் திரைப்படத்திலேயே சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருது பெற்ற பெருமைக்குரியவர் கே.வி.ஆனந்த். அதன் பின்னர், 1996 ஆம் ஆண்டு ’காதல் தேசம்’என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இதன் பின்னர், நேருக்கு நேர், முதல்வன், விரும்புகிறேன், பாய்ஸ், செல்லமே, சிவாஜி ஆகிய வெற்றிப் படங்களுக்கு, ஒளிப்பதிவாளராக கே.வி.ஆனந்த் பணியாற்றியுள்ளார்.
தமிழ் திரைப்படங்கள் தவிர, மலையாளம், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி களில் 15 திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். 2005-ஆம் ஆண்டு நடிகர் ஸ்ரீகாந்த், கோபிகா, பிருத்விராஜ் நடித்த ‘கனாக் கண்டேன்’ படம் மூலம் இயக்குநராக புதிய அத்தியாயத்தைத் தொடங்கினார்.
இதன் பின்னர், 2009-ஆம் ஆண்டு நடிகர் சூர்யா, தமன்னா நடிப்பில் இவர் இயக்கிய ‘அயன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. ஒளிப்பதிவாளராக உச்சத்தைத் தொட்டிருந்த கே.வி.ஆனந்த்தை, 2011-ஆம் ஆண்டு வெளியான ‘கோ’ திரைப்படம், சிறந்த இயக்குநராக அடையாளப்படுத்தியது.
இதையடுத்து, நடிகர் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்திருந்த ‘மாற்றான்’ படம் மூலம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தார். 2015-ஆம் தனுஷ் நடித்த ‘அனேகன்’, 2017-ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடித்த ‘கவண்’, சூர்யா நடிப்பில் ‘காப்பான்’ ஆகிய திரைப்படங்கள் மூலம், சிறந்த இயக்குநராக கே.வி. ஆனந்த் முத்திரை பதித்தார்.
ஒளிப்பதிவாளராகவும், இயக்குநராகவும் திறைமையை நிரூபித்த கே.வி.ஆனந்தின் மறைவு, திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.







