எம்பிசி பட்டியலில் இருக்கும் நரிக்குறவர் என்ற பெயரில் உள்ள குறவர் என்பதை நீக்கம் செய்யக்கோரிய உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை விளாங்குடியைச் சேர்ந்த இரணியன்(எ)முத்துமுருகன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழை பூர்வீகமாகக் கொண்டு மலைப்பகுதியில் வசித்தவர்கள் குறவர் சமூகத்தினர். அவர்கள் தமிழ்நாட்டில் எஸ்.சி – எஸ்.டி பட்டியலில் உள்ளனர். மலைப்பகுதியில் இருந்த அவர்கள், இன்று சமதள பரப்பில் வசிக்கின்றனர். அவர்களுக்கு மலைக்குறவன், குறவன் உள்ளிட்ட பெயர்களும் உண்டு.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த 1951ல் எம்பிசி பட்டியலில் நரிக்குறவர்கள் சேர்க்கப்பட்டனர். குறவர்கள், தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள். ஆனால், நரிக்குறவர்களின் சமயம், பழக்கவழக்கம், திருமண முறைகள் வேறுபாடு உடையது. இவர்கள் ஆந்திராவில் குருவிக்காரர்கள், நரிக்குறவர்கள் என்றும், குஜராத்தில் வாக்கிரிவாலா என்றும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள், தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் அல்ல. ஆந்திரா மற்றும் குஜராத்தில்
இருந்து வந்தவர்கள். இவர்களது கலாச்சார முறை வேறுபட்டது.
அவர்களுக்கு இடஒதுக்கீட்டு சலுகை வழங்குவதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபமும்
இல்லை. ஆனால், எங்களது குறவர் என்ற பெயரை எம்பிசி பட்டியலில் உள்ள நரிக்குறவர் என்ற பெயரில் இருந்து நீக்க வேண்டும். அவர்களை நரிக்காரரர், குருவிக்காரர், வாக்கிரிவாலா, நக்கலே என எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். குறவர், குறவன் என்பது எங்களின் பெயர். இந்த பெயர் சிக்கலால், எங்களது கல்வி, வேலைவாய்ப்பில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, எம்பிசி பட்டியலில் நரிக்குறவர் என்ற பெயரில் உள்ள குறவர் என்பதை நீக்கம் செய்ய வேண்டும் என தான் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு, இன்று நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.