கே.எஸ்.அழகிரியை மாற்றக்கூடாது என கோரி அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்திக்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் பெங்களூரூவில் முகாமிட்டுள்ளனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ்.அழகிரி 2019 ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். அவரது தலைமையின் கீழ் நாடாளுமன்ற தேர்தலில் 8 இடங்களிலும், சட்டமன்ற தேர்தலில் 18 இடங்களிலும் அக்கட்சி வெற்றி பெற்றது. அவர் நியமிக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகவுள்ள நிலையில், புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியானது. புதிய தலைவர் பதவிக்கு திருநாவுக்கரசர், செல்லக்குமார், ஜோதிமணி, விசுவநாதன், விஜயதரணி, சசிகாந்த் செந்தில் ஆகியோரின் பெயர்கள் அடிபடுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ். அழகிரியே நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு ஒரு ஆண்டே உள்ளதால் அவரை மாற்றக்கூடாது என வலியுறுத்தி கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்திக்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக 11 எம்எல்ஏக்கள், 2 எம்பிக்கள் மற்றும் மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள் பெங்களூருவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை இன்று மாலை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.