கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனை மீண்டும் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள தொழிற்பூங்காவில் தனியார் கார் நிறுவனத்தின் புதிய
கிளையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்துவைத்தார். பின்னர், செய்தியாளர்களை
சந்தித்த அவர், கொரோனா பரவல் உலகம் முழுவதும் அதிகரித்துக் கொண்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா, டெல்லி போன்ற இடங்களில் 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் டெல்லியில் ஆயிரம் என்ற எண்ணிக்கையில் இருந்த தோற்று 24 மணி நேரத்தில் மேலும் 1000ஆக அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை தோற்று
பரவல் அதிகரித்து வருகிறது. பிஎ4, பிஎ5 உள்ளிட்ட வகைகளில் வைரஸ் பரவி
வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் 1,600 நபர்களுக்கு தொற்று பாதித்துள்ளது. 92% நபர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 8
சதவீதம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை தண்டையார்பேட்டை மருத்துவமனையில் 5 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீட்டில் தனிமைப்படுத்த வசதி இல்லாதவர்கள் மருத்துவமனை மூலம் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, தொடர்ந்து கொரோனா கேர் சென்டர் அதிகரிக்க
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ராஜீவ் காந்தி, ஸ்டான்லி கீழ்ப்பாக்கம்
உள்ளிட்ட மருத்துமனைகள் கொரோனாவுக்கு தனிப்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு
வருகிறது. கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் மீண்டும் கொரோனா சிகிச்சைக்காக மாற்றுவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது தொற்று அதிகரித்தாலும் உயிர் பாதிப்பு என்பது குறைவாகவே உள்ளது. தொற்று பாதித்தவர்கள் 6 முதல் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டால் மீண்டும் நெகட்டிவ் வந்து விடுகிறது. இந்த தொற்று வேகமாக பரவும் தன்மை கொண்டதால் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பள்ளிக் குழந்தைகள், சிறுவர்களுக்கு சளி, காய்ச்சல் உள்ளிட்ட உபாதைகள்
ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை நாடுவது அவசியம். பள்ளி செல்லும் குழந்தைகளை பெற்றோர்கள் கண்காணிப்பது அவசியம். சென்னையில் 122 இடங்களில் மூன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் தோற்று பாதித்தவர்கள்
இருக்கிறார்கள். குறிப்பாக அந்த இடங்களில் மாநகராட்சி சார்பாக நோட்டீஸ்
ஒட்டப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 2016ஆம் ஆண்டு நீட் தேர்வு இல்லாத தமிழக பாடத்திட்டத்தில் மருத்துவம் படித்த கடைசி பேட்ச் மாணவர்கள் 3 தங்கப் பதக்கம் பெற்றுள்ளனர். அவர்கள் இன்று முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற உள்ளனர்.
-ம.பவித்ரா







