உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த முதல் இந்தியர் என்ற சாதனையை, பிரபல பேட்மின்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் புரிந்துள்ளார்.
ஸ்பெயினின் வெல்வா நகரில் 26 வது உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், சக நாட்டு வீரரான லக்ஷயா சென்னுடன் மோதினார்.
பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், முதல் செட்டை இழந்த ஸ்ரீகாந்த், பிறகு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியில், ஸ்ரீகாந்த் 17-21, 21-14, 21-17 என்ற செட் கணக்கில் லக்ஷயா சென்-னை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இதன்மூலம்,உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
முன்னதாக ,1983 ஆம் ஆண்டு பிரகாஷ் படுகோனும், 2019 ஆம் ஆண்டு சாய் பிரனீத்தும் உலக பேட்மின்டன் அரையிறுதிவரை சென்று தோல்வி அடைந்துள்ளனர். இப்போது இறுதிப் போட்டிக்குள் நுழைந்து ஸ்ரீகாந்த் சாதனை புரிந்ததன் மூலம் இந்தியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கம் உறுதியாகி இருக்கிறது.








