கிழக்கு தாம்பரத்தில் உணவுப் பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனையில் சுமார் 150 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்ட நிலையல், முறையாக பாராமரிக்காத கடைகள் மூடப்பட்டன.
கிழக்கு தாம்பரத்தில் செங்கல்பட்டு உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அனுராதா தலைமையில் பல்வேறு உணவு கடைகளில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது முறையான பாதுகாப்பு இல்லாமல், சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட கடைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பிரியாணி கடை ஒனறில் கெட்டு போன முட்டையை பறிமுதல் செய்து குப்பையில் கொட்டி அழித்தனர். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவரை பறிமுதல் செய்து கடுமையாக எச்சரித்தனர்.
பின்னர் இட்லி கடை ஒன்றில் சுகாதாரமற்ற முறையில் இருந்தது, உணவு சான்றிதழ் இல்லாததால் உணவகத்தை மூட உத்தரவிட்டார்.
அதன் பின் ஐஏஎப் சாலையில் உள்ள உணவகத்தில் உள்ளே சென்று ஆய்வு செய்து குளிர்பதன பெட்டியை திறந்து பார்த்ததும் குப்பென துர்நாற்றம் வீசியது அதிலிருந்து சிக்கன், மட்டன், இறால், மாட்டு இறைச்சி அனைத்தையும் குப்பையில் கொட்டி அழித்தனர்.
உணவு சான்றிதழ் இல்லாததால் நோட்டீஸ் வழங்கப்பட்டு உணவகத்தை மூட உத்தரவிட்டார். மேலும் சான்றிதழ் பெற்று குளிர்பதன பெட்டியைப் புதிதாக மாற்றவும் அறிவுறுத்தினார். சான்றிதழ் பெறாமல் உணவகத்தை மீண்டும் திறந்தால் சீல் வைக்கப்படும் என எச்சரித்தார்.
பின்னர் மாவட்ட நியமன அலுவலர் அனுராதா செய்தியாளர்களிடம் பேசினார்.
இறைச்சி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு சோதனைக்கு அனுப்பப்பட்டு அதன் முடிவுகளின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இரண்டு நாட்களில் 158 கடைகளில் நடைபெற்ற சோதனையில் கெட்ட்போன 150 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.







