சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளையொட்டி குஜராத்தில் உள்ள அவரது சிலைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலை போற்றும் வகையில், குஜராத்தில் நர்மதை நதிக்கரையில் 597 அடி உயரமுள்ள பிரம்மாண்ட சிலையை மத்திய அரசு நிறுவியுள்ளது. அவர் பிறந்த தினமான அக்டோபர் 31ம் தேதி, தேசிய ஒற்றுமை தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு படேலின் சிலை அருகே, தேசிய ஒற்றுமை தினக் கொண்டாட்டங்களுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்தது. ஜி20 மாநாட்டிற்காக பிரதமர் மோடி இத்தாலி சென்றுள்ளதால், இந்த விழாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை தாங்குவார் எனவும் கூறப்பட்டிருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்படி, படேலின் பிறந்த நாளான இன்று குஜராத்தில் கெவாடியா (Kevadia)வில் உள்ள அவர் சிலைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து காவல்துறை சார்பில் நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்த அணிவகுப்பில், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய அமித் ஷா, நாட்டை துண்டாடுவதற்கு ஆங்கிலேயேர்கள் மேற்கொண்ட சதியை சர்தார் வல்லபாய் படேல் முறியடித்து அகண்ட பாரதத்தை உருவாக்கினார் என புகழாரம் சூட்டினார். சர்தார் பட்டேலை மறக்க முயற்சிப்பது துரதிர்ஷ்டவசமானது என்றும் அவர் சொன்னார். நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட அவரது பங்களிப்புக்கு பாரத ரத்னாவோ உரிய மரியாதையோ அளிக்கப்படவில்லை என்று கூறிய அவர், நிலைமை மாறியதும் அவருக்கு பாரத ரத்னாவும் உலகின் உயரமான சிலையும் அமைக்கப்பட்டது என்றார்.
கெவாடியா என்பது ஓர் இடத்தின் பெயர் மட்டுமல்ல, தேசிய ஒற்றுமைக்கும் தேசப் பக்திக்குமான கோயிலாக மாறிவிட்டது என்று மேலும் கூறிய அமைச்சர் அமித்ஷா, வானளாவிய சர்தார் படேலின் இந்த சிலை, இந்தியாவின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது என்றும் நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் யாராலும் சிதைக்க முடியாது என்ற செய்தியையும் உலகிற்கு எடுத்துரைக்கிறது என்றும் அமித் ஷா கூறினார்.