தமிழகத்தில் கொட்டப்படும் கேரள கழிவுகள்

கேரளாவில் இருந்து கொண்டு வரப்படும் இறைச்சி கழிவுகள் நெல்லையில் கொட்டப்பட்டு வருவதால் நோய் ஏற்படும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். ராதாபுரம் அருகே உள்ள சிதம்பரபுரம் ஊராட்சி பகுதியை சேர்ந்த கிராமம் ஆத்துக்குறிச்சி. இக்கிராமப்…

கேரளாவில் இருந்து கொண்டு வரப்படும் இறைச்சி கழிவுகள் நெல்லையில் கொட்டப்பட்டு வருவதால் நோய் ஏற்படும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.

ராதாபுரம் அருகே உள்ள சிதம்பரபுரம் ஊராட்சி பகுதியை சேர்ந்த கிராமம் ஆத்துக்குறிச்சி. இக்கிராமப் பகுதியில் மாட்டு எலும்பு, தோல் மற்றும் கோழி இறைச்சி கழிவுகள் கடந்த 18ம் தேதி நள்ளிரவில் பெருமளவில் கொட்டப்பட்டு இருந்தது. அப்பகுதியில் இருந்து அதிக அளவு துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து சிதம்பரபுரம் ஊராட்சித் தலைவர் பேபிமுருகன், ராதாபுரம் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பெயரில் போலிசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கேரளா மாநிலம் எர்ணாவூரை சார்ந்த தனியார் மாட்டு எலும்பு கம்பெனியில் இருந்து, சுமார் 130 டன் எடை கொண்ட எலும்பு மற்றும் இறைச்சி கழிவுகள் ஆத்துக்குறிச்சி பகுதியில் பல இடங்களில் கொட்டப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர்.

 

இச்சம்பவத்தில் ராதாபுரம் பட்டார்குளத்தை சேர்ந்த உதயகுமார்(39), அருள் (37) மற்றும் இளையநயினார் குளத்தைச் சேர்ந்த முத்து(60) ஆகியோர் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மூவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து பின்னர் ஜாமினில் விடுவித்தனர். இந்நிலையில் ஆத்திக்குறிச்சி பகுதியில் கொட்டப்பட்ட இறைச்சி கழிவுகள் மூன்று நாட்களை கடந்த நிலையிலும் அகற்றப்படவில்லை. இதன் தொடர்பாக தொற்றுநோய் பரவும் அபாயம் உச்சகட்டத்தை அடைந்துள்ளதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

 

கேரளா பகுதியில் இருந்து களியக்காவிளை, ஆரல்வாய்மொழி, காவல்கிணறு ஆகிய செக் போஸ்ட்டுகளை கடந்து நெல்லை மாவட்ட பகுதிகளில் கொட்டப்படுவது தொடர்கதையாக நீடிக்கிறது. இறைச்சி கழிவுகள் கொட்டப்படும் சம்பவம் குறித்து பல முறை புகார் தெரிவித்தும், அரசு தரப்பில் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் இருந்து வருகிறது.

இதற்கான நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக இருந்து வந்தது. மக்களின் கோரிக்கை நியூஸ் 7 தமிழின் அறச்சீற்றம் வழியாக அரசுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.