ஓமலூர் அருகே பல லட்ச ரூபாய் மதிப்புள்ள 10 டன் கடத்திய லாரியுடன் வெள்ளை
கற்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வெள்ளைக்கல் கடத்தல் குறித்து
கனிமவளத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள வெள்ளைக்கல்பட்டி கிராமத்தில்
வெள்ளைக் கற்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த வெள்ளைக்கற்கள் அதிக விலைக்கு
விற்கப்படுகிறது. இதில், சானிடரிவேர்ஸ், டைல்ஸ் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள்
தயாரிக்கப்படுகிறது. இந்தநிலையில், இங்குள்ள வெள்ளைக் கற்கள் மற்றும் கனிம
வளங்களை வெட்டி எடுப்பதை தடுக்க கனிமவளத் துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆனால், சட்டவிரோதமாக வெள்ளைக்கல் கடத்துவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனிடையே மர்ம நபர்கள் வெள்ளைக்கல்பட்டி கிராமத்தில் இருந்து வெள்ளை கற்களை
வெட்டி லாரியில் கடத்தி செல்வதாக சேலம் சுரங்கத் துறை உதவி பொறியாளர் பிரசாத்
மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து கருப்பூர் பகுதிக்குச் சென்ற அதிகாரிகள் வெள்ளைக்கல் கரடு பகுதியில் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். அப்போது உப்பு கிணறு பகுதியில் இருந்து சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 10 டன் வெள்ளைக் கற்களை அனுமதியின்றி லாரியில் மேட்டூர் சிட்கோ பகுதிக்கு கொண்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து சுமார் 10 டன் எடையுள்ள வெள்ளைக் கற்களையும், கடத்தல் லாரியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து நடந்த சம்பவம் குறித்து கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் கருப்பூர் போலீசார் வெள்ளைக் கற்கள் கடத்தல் வழக்குப் பதிவு செய்து லாரியுடன் வெள்ளைக் கற்களை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் வைத்தனர்.
தொடர்ந்து லாரி ஓட்டுனர் பெருமாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஓமலூர் வருவாய் துறை அதிகாரிகளும், சேலம் கனிமவளத் துறை அதிகாரிகளும் வெள்ளைக்கல் கடத்தலை தடுப்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.