கீழடி தொடர்பாக சீன மாணவர்களுக்கு பாடம்

கீழடி தொடர்பாக சீனாவில் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது. மதுரை அருகே சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2014 ஆம் ஆண்டு முதற்கட்ட அகழாய்வு தொடங்கி தற்போது கீழடி, கொந்தைகை, அகரம் பகுதிகளில் 7ஆம் கட்ட அகழாய்வு…

கீழடி தொடர்பாக சீனாவில் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது.

மதுரை அருகே சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2014 ஆம் ஆண்டு முதற்கட்ட அகழாய்வு தொடங்கி தற்போது கீழடி, கொந்தைகை, அகரம் பகுதிகளில் 7ஆம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வுகளில் 2,600 ஆண்டுகளுக்கு முன்பும் தமிழர்கள் நாகரிகத்துடன், கல்வி, கலை, நீர்மேலாண்மை, தொழில்துறையில் சிறந்து விளங்கியதற்கு ஆதரங்கள் கிடைத்துள்ளன.

பிராமி எழுத்துக்கள், உறை கிணறு, செங்கலால் ஆன கட்டுமானங்கள், மழைநீர் சேமிப்பு அமைப்பு, மணிகள், தங்கத்தினால் செய்யப்பட்ட ஆபரணங்கள், இரும்பு, சூது பவள மணிகள், வண்ண ஓடுகள் உள்ளிட்ட 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல்லியல் ஆதாரங்கள் கிடைத்துள்ளது.

இதனிடையே மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பயிற்சி ஒன்றில் சீன நாட்டின் யுன்னான் மிஞ்சூ பல்கலைக்கழக தமிழ்த்துறையில் பணியாற்றும் கிக்கி ஜாங் என்ற நிறைமதி பங்கேற்றிருந்தார். மேலும் அவர் கீழடி அகழாய்வு பகுதிக்கும் உலக தமிழ்ச் சங்க வளாகத்தில் அமைந்துள்ள கீழடி தொல்பொருள் அருங்காட்சியகத்திற்கும் வருகை தந்து பார்வையிட்டார். இந்நிலையில் தன்னுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கு கீழடி பெருமை குறித்து பாடம் எடுத்ததாக முகநூலில் கிக்கி ஜாங் பெருமையுடன் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணைய தளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.