கச்சத்தீவு மீட்பு தீர்மானம் – பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆதரவு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் கொண்டுவரப்பட்ட கச்சத்தீவு மீட்பு தீர்மானத்திற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சட்டப்பேரவையில் இன்று(ஏப்ரல்.02) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்  தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இது குறித்து அவர் அவையில் பேசியபோது, “ தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டிடவும், இலங்கைக் கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஏற்படும் அனைத்து இன்னல்களைப் போக்கிடவும், கச்சத்தீவை மீண்டும் பெறுவதே நிரந்தரத் தீர்வாக அமையும்.

இந்திய மற்றும் இலங்கை இடையேயான ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து, கச்சத்தீவைத் திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்றும், அரசுமுறைப் பயணமாக இலங்கை செல்லும் பிரதமர் அந்நாட்டு அரசுடன் பேசி, இலங்கை சிறையில் வாடும் நம் நாட்டு மீனவர்களையும், அவர்களது படகுகளையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்து மீட்டுக் கொண்டு வரவேண்டுமென்று இப்பேரவை வலியுறுத்துகிறது” என்று கூறினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானத்தின் மீது நடத்தப்பட்ட விவாதத்தில் கலந்துகொண்டு அனைத்துக் கட்சிகளின் எம்எல்ஏக்களும் தங்களின் நிலைபாட்டை தெரிவித்து பேசினர். அப்போது பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன், “கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்ட நாள்முதலே அது தவறென்று பாஜக கூறி வருகிறது. வரலாற்று தவறை பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே சரிசெய்ய வேண்டும்”  என்று தீர்மானத்திற்கு பாஜக சார்பில் ஆதரவு தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.