காஷ்மீர் தாக்குதல் – சவுதி பயணத்தை பாதியிலேயே முடித்து இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி!

காஷ்மீர் தாக்குதலைத் தொடர்ந்து சவுதி பயணத்தை பாதியிலேயே முடித்து டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி.

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காமில் உள்ள சுற்றுலாத் தளம் ஒன்றில் நேற்று  தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 2 வெளிநாட்டவர் உட்பட 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இது 2019ஆம் நடந்த புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீரில் நடந்த மிக மோசமான தாக்குதலாகும்.

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாதக் குழுவின் நிழல் குழுவான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட், இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. ஆனால் அதை அரசு இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

தீவிரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி உட்பட அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி உள்ளிட்ட உலக தலைவர்களும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடியின் அறிவுறுத்தல் பேரில் பாதுகாப்பு படையினருடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் அரசு முறை பயணமாக சவுதி சென்ற பிரதமர் மோடி தாக்குதலை தொடர்ந்து தனது பயணத்தை பாதியிலேயே முடித்துவிட்டு டெல்லி திரும்பினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.