காசிக்கும், தமிழகத்துக்கும் இடையே உள்ள மிகப்பெரிய உறவை காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி பிரதிபலிக்கிறது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கும், உத்தரப்பிரதேசத்திற்கும் குறிப்பாகக் காசிக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையே நீண்டகால தொடர்பு உள்ளது. இதற்காக வாரணாசியில் ‘காசி தமிழ்ச் சங்கமம்’ என்ற பெயரில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சி வரும் டிசம்பர் மாதம் 19ம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரதமர் மோடி தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சட்டை அணிந்து வந்திருந்தார். இந்நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், இளையராஜா, மத்திய இணைஅமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் வரவேற்பு உரையாற்றிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற பாரதியாரின் கனவை நிறைவேற்றும் வகையில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. புனித பூமியான வாரணாசியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஒரு சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காசிக்கும் தமிழகத்துக்கும் உள்ள மிகப்பெரிய உறவை காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி பிரதிபலிக்கிறது என தெரிவித்துள்ளார்.
பாண்டிய மன்னன் அதிவீர ராம பாண்டியன் காசிக்கு புனித யாத்திரை மேற்கொண்ட பின்னர், தமிழகத்திற்கு திரும்பி தென்காசியில் பெரிய சிவாலயத்தை நிறுவினார். காசிக்கும், தமிழகத்திற்கும் இடையிலான உறவை காசிக்காண்டம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
பக்தர்கள் காசிக்கும், ராமேஸ்வரத்துக்கும் இடையே ஆன்மீக யாத்திரையை மேற்கொண்டு வருகின்றனர். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியார் பெயரில் ஒரு இருக்கை அளித்து பிரதமர் மோடி பெருமைப்படுத்தினார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.




