மணப்பாறை அருகே கருங்குளம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியில், வீரர்கள் காளைகளை போட்டி போட்டு அடக்க முயன்றதில் இதுவரை 22 மேற்பட்டோர் பேர் காயம் அடைந்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கருங்குளம் புனித இஞ்ஞாசியார் ஆலய திடலில், புனித வனத்து அந்தோணியார் பொங்கல் திருவிழாவினை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் 600-க்கும் மேற்பட்ட காளைகளும், 300-க்கும் மேற்பட்ட வீரர்களும் களம் காணுகின்றனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியினை ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் செல்வராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முதலில் வாடிவாசல் வழியாக கோவில்காளை அவிழ்த்துவிடப்பட்டதைத் தொடர்ந்து, திருச்சி, திண்டுக்கல், மதுரை, நாமக்கல், புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் வாடிவாசலில் இருந்து ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டது. அப்போது வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்றனர். ஆனால் மிகவும் வலிமை வாய்ந்த காளைகள் சில தன்னை அடக்க வந்த வீரர்களை அருகில் கூட நெருங்கவிடாமல் களத்தில் நின்று பந்தாடியதோடு, நெருங்க முயன்ற வீரர்கள் சிலரையும் கொம்பால் குத்தி தூக்கி வீசியது.
இருந்தும் களத்தில் நின்று மிரட்டிய காளைகளையும் வீரர்கள் மல்லுக்கட்டி திமிலை பிடித்து மடக்கி வெற்றி வாகை சூட்டினர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மதியம் 12 மணி நிலவரப்படி 3 சுற்றுகள் முடிவடைந்திருந்த நிலையில் 229 காளைகள் களம் இறக்கப்பட்டிருந்தது. அதில் காளைகளை அடக்க முயன்ற 22 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 22 பேரில் 4 பேர் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
மேலும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக்கும், அதன் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் சைக்கிள், கட்டில், பிரோ, உள்ளிட்ட பல்வேறு வகையான பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது .இப்போட்டியை ஏராளமான பொதுமக்கள் நேரில் கண்டு ரசித்தனர்.
- பி.ஜேம்ஸ் லிசா