கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்தது.
கர்நாடக சட்டப்பேரவைக்கு வருகிற மே 10ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13ம் தேதி தொடங்கியது. ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் பெரும்பாலான தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்டன.
முதல்வர் பசவராஜ் பொம்மை சிக்காவி தொகுதியில் மனு தாக்கல் செய்தார். சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வருணா தொகுதியில், உப்பள்ளி-தார்வார் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், டி.கே.சிவகுமார், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் குமாரசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மனு தாக்கல் செய்தனர். நேற்று ஒரே நாளில் 935 பேர் மனு தாக்கல் செய்தனர்.
வேட்பாளர்களில் ஆண்கள் 873 பேரும், பெண்கள் 62 பேரும் உள்ளனர். ஆம் ஆத்மி கட்சி 91 மனுக்களையும், பா.ஜனதா 164 மனுக்களையும், காங்கிரஸ் 147 மனுக்களையும், ஜனதா தளம்(எஸ்) 108 மனுக்களையும், பகுஜன் சமாஜ் கட்சி 46 மனுக்களையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒரு மனுவையும் தாக்கல் செய்துள்ளன.
பதிவு செய்த மற்றும் பதிவு செய்யப்படாத கட்சிகள் சார்பில் 193 மனுக்களும், சுயேச்சைகள் 359 மனுக்களையும் தாக்கல் செய்துள்ளனர். மொத்தத்தில் இதுவரை 5 நாட்களில் 2,968 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனு தாக்கல் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது.







