கர்நாடக வனத்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இறந்த தமிழக மீனவர் ராஜாவின் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேட்டூரை அடுத்த கோவிந்தபாடியை சேர்ந்த ராஜா, இளையபெருமாள், தருமபுரி மாவட்டம் ஏமனூரை சேர்ந்த ரவி ஆகிய மூன்று பேரும் கடந்த செவ்வாய் அன்று காவிரி ஆற்றை பரிசல் மூலம் கடந்து மறு கரையில் உள்ள கர்நாடக வனப்பகுதியில் மான் வேட்டைக்கு சென்றதாகக் கூறப்படுகிறது.
வனப்பகுதியில் துப்பாக்கி சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு வந்த கர்நாடக வனத்துறையினர் அங்கிருந்த மூன்று பேரை சரணடையுமாறு வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரித்ததாகவும், அப்போது அவர்கள் தங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக கர்நாடக வனத்துறை தரப்பில் கூறப்படுகிறது.
பதிலுக்கு கர்நாடக வனத்துறையினர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் அப்போது அவர்கள் துப்பாக்கிகளை அங்கேயே போட்டுவிட்டு ஆற்றில் குதித்து தப்பி ஓடியதாகவும் கூறப்படுகிறது. இதில் ரவி மற்றும் இளையபெருமாள் கரையேறினர். ஆனால், ராஜா மட்டும் கரை சேரவில்லை. இந்த நிலையில் கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் குண்டு அடிபட்ட ராஜாவின் சடலம் பாலாறு நீர் தேக்கப் பகுதியான காவிரி ஆற்றில் கிடந்தது. இதனை காண உறவினர்களும், ஊர்மக்களும் குவிந்ததால் பதற்றம் ஏற்பட்டது.
அண்மைச் செய்தி: கர்நாடக வனத்துறையினரின் துப்பாக்கி சூடு விவகாரம்; சேலம் மாவட்ட எஸ்பி நேரில் ஆய்வு
கர்நாடக வனத்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று அதுவரை ராஜாவின் உடலை வாங்க மாட்டோம் என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளனர். இதற்கிடையில் ராஜாவின் உயிரிழப்பை சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து, ஈரோடு மாவட்டம் பர்கூர் போலீசார், ராஜாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், கர்நாடக வனத்துறை துப்பாக்கிச்சூட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டால் உயிரிழந்த மீனவர் ராஜா குடும்பத்தினருக்கு 5 லட்ச ரூபாய் நிதி வழங்கப்படும் என்றும் மீனவரை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.







