கர்நாடக தேர்தல் : மக்களுக்கு ஆனந்த கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த டி.கே.சிவக்குமார்

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு  வாக்களித்த மக்களுக்கு  கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி  தலைவர் டி.கே.சிவக்குமார் ஆனந்த கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளார். 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு…

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு  வாக்களித்த மக்களுக்கு  கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி  தலைவர் டி.கே.சிவக்குமார் ஆனந்த கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளார்.

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக கடந்த 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என மூன்று பெரும் கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவிய நிலையில், மொத்தமாக 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.

கடந்த 10-ம் தேதி நடைபெற்ற தேர்தலில், 73.19 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்தநிலையில் வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 36 வாக்கு எண்ணும் மையங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்படும் என்பதால், இன்று பிற்பகலுக்குள் கர்நாடகாவில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது தெரிந்துவிடும்.

பகல் 1 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 130-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 66 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 22 தொகுதிகளிலும் , பிற கட்சிகள் 6 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன. காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக முன்னிலையில் உள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் டி.கே.சிவக் குமார் ஆனந்த கண்ணீர் மல்க பேட்டியளித்தார். அவர்  தெரிவித்ததாவது..

“காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. இந்த வெற்றி தொண்டர்களின் கடின உழைப்புக்கு கிடைத்தது.  கர்நாடகாவை நான் காப்பாற்றுவேன் என்று சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோருக்கு உறுதி அளித்தேன். சிறையில் என்னை சந்திக்க சோனியா காந்தி வந்ததை  என்னால் மறக்க முடியாது.

அடுத்த கட்ட நடவடிக்கையை காங்கிரஸ் அலுவலகத்தில் முடிவு செய்வோம். சித்தராமையா உட்பட எனது மாநிலத்தில் உள்ள அனைத்து தலைவர்களுக்கும் நன்றி” என டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.