“ஆழமான அர்த்தம் கொண்டது அக்னிபத் திட்டம்” என்று நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவத்தில் ஆள் சேர்ப்பதற்காக `அக்னிபத்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவும் எதிர்ப்பும் எழுந்து வருகிறது. எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன. முக்கியமாக இந்தத் திட்டத்துக்கு எதிராக பல்வேறு பகுதிகளில் போராட்டங்களும் வலுத்து வருகின்றன. தெலங்கானா மாநிலத்தில் நடந்தப் போராட்டம் கலவரமாக வெடித்து ஒருவர் பலியான சம்பவமும் நடந்துள்ளது. இந்நிலையில், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அக்னிபத் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்து கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “இஸ்ரேல் போன்ற நாடுகள் தங்களது நாட்டில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் ராணுவ பயிற்சி மேற்கொள்வது என்பதை கட்டாயமாக்கியுள்ளன. இதன் மூலம் அனைவருக்கும் தேசியம், ஒழுக்கம், கட்டுப்பாடு, எல்லைகளை பாதுகாப்பதன் அவசியம் என வாழ்க்கையில் முக்கியத்துவமான விஷயங்களை புரிந்துகொள்வார்கள். வேலை வாய்ப்பு, தொழிலை வளர்ப்பது, பணம் சம்பாதிப்பது போன்றவற்றை விட, அக்னிபத் திட்டம் மிகவும் ஆழமான அர்த்தம் கொண்டது. முன்பு ஒருகாலத்தில் அனைவரும் குருகுலம் செல்வார்கள். இதுவும் அது போலத்தான். இதை செய்ய ஊதியம் கொடுக்கிறார்கள். அவ்வளவு தான். அதிர்ச்சியளிக்கும் அளவிலான எண்ணிக்கையில் இளைஞர்கள் போதை மற்றும் பப்ஜீ மூலம் சீரழிந்து கொண்டிருக்கின்றனர். அதில் இருந்து அவர்களை மீட்பதற்கு இந்த சீர்திருத்தம் அவசியம். முக்கியத்துவம் வாய்ந்த இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கும் அரசுக்கு என் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறியிருக்கிறார்.
-ம.பவித்ரா