ஸ்ரீரங்கம் கோவில் வாசலில் உள்ள பெரியார் சிலை குறித்து அவதூறாக பேசிய வழக்கில், திரைப்பட சண்டை இயக்குநர் கனல் கண்ணன் புதுச்சேரியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இந்துகள் உரிமை மீட்பு என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் இந்து முன்னணி சார்பில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்த பிரச்சாரத்தின் தொடக்க விழா சென்னை மதுரவாயல் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. அதில், திரைப்பட சண்டை இயக்குநர் கனல் கண்ணன் பங்கேற்று பேசினார். அப்போது, திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தினசரி லடசக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பக்தர்கள் கோவிலுக்கு உள்ளே செல்லும் வழியில் கடவுள் இல்லை என்று சொன்ன பெரியார் சிலை உள்ளது. இந்த சிலை என்றைக்கு உடைக்கப்படுகிறதோ அப்போது தான் இந்துக்களின் எழுச்சி நாள் என்று கூறியிருந்தார். இவரது பேச்சு சர்ச்சைக்கு உள்ளானது. இதையடுத்து, தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில், கனல் கண்ணனை கைது செய்ய கோரி, சென்னை மாநகராக காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில், பொது அமைதியை சீர்குலைத்தல் சட்டப்பிரிவுகளின் கீழ் கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவான அவரை தீவிரமாக தேடி வந்தனர். இதனிடையே, இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி கனல் கண்ணன் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்துர். ஆனால் அவரது மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இந்நிலையில், புதுச்சேரியில் கனல் கண்ணன் தங்கியிருப்பதாக சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கனல் கண்ணனை கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளான 153- கலகம் செய்ய தூண்டிவிடுதல், 505(1)(b)- அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
– இரா.நம்பிராஜன்