காமராஜர் 119 வது பிறந்த நாள்: முதலமைச்சர் மலர் தூவி மரியாதை

காமராஜரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் உருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்த நாளான இன்று, ’கல்வி வளர்ச்சி தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது.…

காமராஜரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் உருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்த நாளான இன்று, ’கல்வி வளர்ச்சி தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது.

காமராஜரின் 119 வது பிறந்த நாள் விழா அரசு விழாவாக இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் மரியாதையை செலுத்தி வருகின்றனர்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள காமராஜரின் உருவச் சில்லைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த விழாவில், டி.ஆர்.பாலு எம்.பி, தயாநிதி மாறன் எம்.பி, அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், உள்ளிட்டோர் இதில் பங்கேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

 


தொண்டு என்பதற்கு உதாரணமாக விளங்கியவர்: ஓ.பன்னீர்செல்வம்

சென்னை தி.நகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் அமைந்திருக்கும் அவரது சிலைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந்நிலையில் ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது:

மனித குலத்துக்கும், நாட்டிற்கும் அருந்தொண்டாற்றி இந்திய மக்களின், குறிப்பாக தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களில் நீக்கமற நிறைந்திருப்பவரும், இளம் வயதிலிருந்தே நாட்டிற்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்டவரும், தொண்டு என்பதற்கு ஓர் உதாரணமாக விளங்கியவரும், கொடி பிடிக்கும் அடிப்படைத் தொண்டனாய் இருந்து தன்னலமற்ற தன் உழைப்பினால் கொடி கட்டி ஆளும் முதலமைச்சராக ஆனவரும், “கல்வி சிறந்த தமிழ்நாடு” என்ற மகாகவி பாரதியாரின் வாக்கினை மெய்ப்பிக்கும் வண்ணம் தமிழகத்தில் கல்விப் புரட்சியை உருவாக்கியவருமான, கர்மவீரர் காமராசரின் பிறந்த நாளான இன்று அவருக்கு என் மரியாதையினையும், வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு கூறியுள்ளார்.

காமராஜர் மணிமண்டபத்தில் கனிமொழி எம்.பி மரியாதை

விருதுநகரில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு கனிமொழி எம்.பி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் டஹ்ங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆகியோரு மரியாதை செலுத்தினர்

காமராஜரின் நற்பணிகளை போற்றுவோம்: டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்தில்,
தமிழ்நாட்டில் எத்தனையோ ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு கல்விக்கண் தந்து அவர்களது தலைமுறைகளை மாற்றிய பெருந்தலைவர் காமராஜரை அவர்களது பிறந்த நாளில் வணங்குகிறேன். தமிழகம் தாண்டி தேசிய அரசியலிலும் முத்திரை பதித்த அன்னாரது நற்பணிகளை எந்நாளும் போற்றிடுவோம்’ என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.