கோவை தெற்குத் தொகுதியில் மீண்டும் மக்களைச் சந்தித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் குறைகளை கேட்டறிந்தார்.
கோவை தெற்கு தொகுதிக்கு உள்பட்ட கெம்பட்டிகாலனி பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பொதுமக்களுடன் கலந்துரையாடி குறைகளைக் கேட்டறிந்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக வானதி சீனிவாசனிடம் 1,728 வாக்கு வித்தியாசத்தில் கமல்ஹாசன் தோல்வியடைந்தார். அதில், தேர்தல் முடிவுகளில் முன்னிலையில் இருந்த கமல்ஹாசன் கடைசி இரண்டு சுற்றுகளில் கெம்பட்டி காலனி வாக்குகளில் சரிவை கண்டார். வெற்றி வாய்ப்பு வானதிக்கு சென்றது.
இந்நிலையில், கெம்பட்டி காலனியில் மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டு வருகிறார். பின்னர், மக்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசியதாவது: 800 குடும்பங்கள் வசிக்கும் பகுதியில் கழிவறை இல்லை, 1 கழிவறை தான் இருக்கிறது. கழிவறை நாங்கள் கட்டித் தருகிறோம். தேர்தல் வாக்குறுதிகள் இல்லை. எங்களால் முடிந்த அளவிற்குச் செய்கிறோம். கிராம சபையை தூசி தட்டி மீண்டும் நடக்க நாங்களும் காரணம். அம்மன்குளம் பகுதியிலும் ஆய்வு செய்து மக்களின் தேவையை செய்வோம். இது அரசியலுக்கு அப்பாற்பட்ட உறவு, சமூகத்திற்கான உறவு.
நாங்கள் கட்டித் தரும் கழிப்பறை நம்முடைய கழிப்பறை. அதை ஆரோக்கியமான இடமாக நீங்கள் வைத்துக் கொள்ள வேண்டும். அதை நான் பார்க்க மீண்டும் வருவேன். அது சுத்தமாக இல்லை என்றால் வெளக்கமாரை எடுத்து நானே சுத்தம் செய்வேன். நான்கு கழிப்பறைகள் கட்டித் தருகிறோம். கடந்த எம்.எல்.ஏ தேர்தலில் உங்களை வெற்றி பெற வைத்தோம் என மக்கள் சொல்கிறார்கள். ஆனால், யார் தோற்கடித்தார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள் என்று கூறி மக்களிடம் மனுக்களை வாங்கிக்கொண்டு புறப்பட்டார்.








